ஆளுநர் அதிகாரம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

மாநிலத்தின் அனைத்து பகுதிக்கும் சென்று ஆய்வு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது!

Last Updated : Jun 24, 2018, 05:53 PM IST
ஆளுநர் அதிகாரம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்! title=

மாநிலத்தின் அனைத்து பகுதிக்கும் சென்று ஆய்வு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் ஆய்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாநிலத்தின் அனைத்து பகுதிக்கும் சென்று ஆய்வு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக கடந்த வெள்ளி அன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு இடையில் நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பரமத்தி சாலை வழியாக அண்ணா நகருக்கு காரில் சென்றார். 

அப்போது ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் ஆளுநரின் காரின் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட திமுக-வினரை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கருப்பு கொடி ஏந்தி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர். 

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தற்போது ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

“மாநிலத்தின் அனைத்து பகுதிக்கும் சென்று ஆய்வு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், பல்வேறு மாவட்டங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்கவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. மாநில அரசியலைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஆளுநருக்கு உள்ளது. 

தமிழக அரசின் எந்தவொரு துறையின் செயல்பாட்டையும் இதுவரை ஆளுநர்  விமர்சித்தது இல்லை. மேலும் ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆளுநர்களின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது" என எச்சரித்துள்ளது.

Trending News