கிரண்பேடிக்கு விளம்பர வியாதி உள்ளது - புதுவை முதல்வர்!

புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு விளம்பர வியாதி இருப்பதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்!

Last Updated : Jul 2, 2019, 01:00 PM IST
கிரண்பேடிக்கு விளம்பர வியாதி உள்ளது - புதுவை முதல்வர்! title=

புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு விளம்பர வியாதி இருப்பதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்!

இன்று கோவை வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமான நிலையத்தில் நிருபர்களிடம் தெரிவிக்கையில்., "புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தமிழக அரசியல் தலைவர்கள் ஊழல் பேர்வழிகள் என்றும், இதில் மக்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மட்டும் இல்லை கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா என பல மாநிலங்களில் மழையின்மை, நீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த பற்றாக்குறை சில மாநிலங்களில் திறம்பட கையாளப்பட்டு உள்ளது. சில மாநிலங்களில் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு இந்த பணிக்கு உதவ வேண்டும்.

இந்நிலையில் இதனை கருவியாக கொண்டு அரசியல் தலைவர்கள், மக்களை அவமானப்படுத்தும் செயலில் கிரண்பேடி ஈடுப்பட்டு வருகின்றார். மற்ற மாநிலங்களின் வி‌ஷயத்தில் தலையிட அவருக்கு அருகதை கிடையாது, தேவையும் இல்லை. தேவையில்லாமல் மற்ற மாநில விவகாரங்களில் தலையிட்டு, அவரே அவப்பெயரை பெற்று கொண்டுள்ளார்.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் அரசியல் தலைவர்கள், மக்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றார். காரணம் அவருக்கு தன்னை தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் வியாதி இருப்பதால். மற்றவர்கள் சொல்வதை என்றும் அவர் கவனிப்பது இல்லை.

புதுச்சேரியிலும் இதுபோன்ற சம்பவத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுப்பதற்காக மோடி, கிரண்பேடியை நியமித்துள்ளார். ஆளுநராக இருந்துகொண்டு தரம் தாழ்ந்த வேலையை அவர் செய்து வருகிறார் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

Trending News