பொறியியல் கல்லூரிகளில் அறிவியல் படிப்புகள் முறையா? -PMK!

பொறியியல் கல்லூரிகளில் அறிவியல் படிப்புகளை அனுமதிப்பது அபத்தம் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

Last Updated : Jan 8, 2019, 12:59 PM IST
பொறியியல் கல்லூரிகளில் அறிவியல் படிப்புகள் முறையா? -PMK! title=

பொறியியல் கல்லூரிகளில் அறிவியல் படிப்புகளை அனுமதிப்பது அபத்தம் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

பொறியியல் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளையும் சேர்த்து நடத்த அனுமதிக்கப்படும்  என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு அறிவித்திருக்கிறது. புதுமையான யோசனை என்ற பெயரில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்துள்ள இந்த யோசனை அபத்தமானது ஆகும். இது உயர்கல்வியில் தேவையற்ற குழப்பங்களையே ஏற்படுத்தும்.

அறிவியல் படிப்பையோ, பொறியியல் படிப்பையோ மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படி ஒரு யோசனையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர் தெரிவிக்கவில்லை. மாறாக, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால், சரிந்து விட்ட தனியார் கல்லூரிகளின் வருமானத்தை உயர்த்தவும், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பொறியியல் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும் தான் இப்படி ஒரு யோசனையை அவர் கூறியுள்ளார். பொறியியல் கல்வியின் தரத்தை உயர்த்துவது பற்றி யோசிக்க வேண்டிய ஓர் ஒழுங்குமுறை அமைப்பின் தலைவர் தனியார் கல்லூரிகளின் உரிமையாளர்கள் நிலையில் நின்று யோசித்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரின் வழிகாட்டுதலில் பொறியியல் கல்வியின் எதிர்காலத்தை நினைத்தாலே கவலையாக உள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பொறியியல் கல்விக்கு வரவேற்பு இல்லை என்பது உண்மை தான். அதேநேரத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் திறமையான ஆட்கள் கிடைக்கவில்லை என்பது தான் வேலைவாய்ப்பு சந்தையின்  குரலாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திலும், பெயர் பெற்ற சில தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்களிலும் படித்த ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளுக்கு வளாகத் தேர்விலேயே மிக அதிக ஊதியத்தில் வேலை கிடைத்திருக்கிறது என்பதிலிருந்தே இந்த உண்மையை உணரலாம்.

பொறியியல் -தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தெரிந்த இந்த உண்மை இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுவின் தலைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும். அப்படியானால், அவர் பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவரோ, அதை செய்வதற்கு பதிலாக பொறியியல் கல்லூரியிலேயே கலை மற்றும் அறிவியல் படிப்புகளையும் நடத்திக் கொள்ளலாம்; பொறியியல் கல்லூரியின் ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்புகளையும் கலை - அறிவியல் படிப்புகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏராளமான சலுகைகளை தனியார் கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளார்.

பொறியியல் கல்வியின் தரம் குறைந்தததற்கு காரணமே, அக்கல்வி கடை சரக்காக மாறி, அதை விற்று அதிக லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமான தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது தான். இவற்றைத் தொடங்கியோரில் பெரும்பாலானோருக்கு கல்வி பற்றிய புரிதலும் இல்லை; பின்னணியும் கிடையாது. வணிக நோக்கத்துடன் கல்லூரிகள் நடத்தப்பட்டதால் தான் பொறியியல் கல்வியின் தரம் குறைந்தது. இப்போது பொறியியல் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் படிப்பையும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டால், அவற்றின் தரமும் வீழ்ச்சி அடைவதைத் தவிர வேறு மாற்றம் நிகழாது.

பொறியியல் கல்வி, கலை-அறிவியல் கல்வி ஆகிய இரண்டுக்குமே எப்போதும் வரவேற்பு இருக்கும். இப்போதைய பிரச்சினை கல்வித் தரம் குறைந்து விட்டது தானே தவிர, கல்வி அல்ல. பொறியியல் கல்லூரிகளின் தரத்தையும், கல்வியின் தரத்தையும் உயர்த்த வேண்டிய பெருங்கடமை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவுக்கு உண்டு. அதைத் தான் அக்குழுவின் தலைவர் செய்ய வேண்டுமே தவிர, மாணவர்கள் சேராத பொறியியல் கல்லூரிகளில் கலை-அறிவியல் பாடங்களையும் கற்பித்து வருவாய் ஈட்டுவது எப்படி? என்று ஆலோசனை வழங்கக்கூடாது. இந்திய தொழில்நுட்பக்கல்விக் குழு ஒழுங்குமுறை அமைப்பே தவிர, வணிக ஆலோசனை அமைப்பு அல்ல என்பதை உணர வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் கலை -அறிவியல் பாடங்களையும் நடத்துவதற்கு அளித்துள்ள அனுமதியை தொழில்நுட்பக் கல்விக்குழு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மாறாக, பொறியியல் கல்வியை மேம்படுத்துவதற்கான உத்திகளை வகுத்து, அவற்றை பொறியியல் கல்லூரிகள் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மற்றொருபுறம், பொறியியல் கல்லூரிகளில் கலை-அறிவியல் படிப்புகளை நடத்த தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதி அளிக்கக்கூடாது. என குறிப்பிட்டுள்ளார்.

Trending News