2019க்கு விடை கொடுப்போம், 2020ஐ வரவேற்போம்: புத்தாண்டு பொதுக்குழு!

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக  பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Last Updated : Dec 21, 2019, 01:20 PM IST
2019க்கு விடை கொடுப்போம், 2020ஐ வரவேற்போம்: புத்தாண்டு பொதுக்குழு! title=

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக  பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,‘‘2019ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2020-ஆம் ஆண்டை வரவேற்போம்’’ என்ற தலைப்பில் டிசம்பர் 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.  

திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஓமந்தூரில் உள்ள ‘பிரவாஸ் பேலஸ்’ அரங்கில் 31.12.2019 அன்று காலை 10.00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெறும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்  பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்.

இந்தக் கூட்டங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் மருத்துவர் அய்யா அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார். 2019-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், 2020-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணித்திட்டங்கள் குறித்து இந்தப் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என குறிப்பிட்டுள்ளார்.

Trending News