சாலை மேம்பாடு திட்டம்... சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் - இது ஏன் முக்கியம்!?

MK Stalin Speech In Assembly: முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Jun 24, 2024, 12:21 PM IST
  • இதனை 110 விதியின் கீழ் அறிவித்தார் ஸ்டாலின்
  • சாலை வளர்ச்சி என்பது மிக, மிக முக்கியமானது - ஸ்டாலின்
  • சாலைகள் கிராமப்புற மக்களின் வருமான அளவினை உயர்த்துகிறது - ஸ்டாலின்
சாலை மேம்பாடு திட்டம்... சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் - இது ஏன் முக்கியம்!? title=

MK Stalin Speech In Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புறச் சாலைகள் திட்டம் குறித்து சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் இன்று அறிக்கை ஒன்றை அளித்தார். 

அதில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது,"தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். நகரம், கிராமம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வளர்ச்சிகளையும் வழங்கி வருகிறோம். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்பதையே நமது திராவிட மாடல் அரசின் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

புதிய அறிவிப்பு

இதில் சாலை வளர்ச்சி என்பது மிக, மிக முக்கியமானது. நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள், கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு வறுமையை ஒழிப்பதில் முக்கியக் காரணியாக உள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக ஒரு புதிய அறிவிப்பை இப்போது நான் வெளியிட விரும்புகின்றேன்.

மேலும் படிக்க | மாதவரத்தில் இருந்து மெத்தனால் சப்ளை.. 4 பேரை கள்ளக்குறிச்சி அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார்

வருமானத்தை உயர்த்தும்

ஊரகச் சாலைகளில் செய்யப்படும் முதலீட்டிற்கும் ஊரக மக்களின் நலனிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துச் சேவைகளின் மேம்பாடு என்பது ஊரகப் பகுதிகளில் வணிகச் செயல்திறனை அதிகப்படுத்துகிறது. அதன்மூலம், இடுபொருள் செலவினைக் குறைத்து வேளாண் உற்பத்தியினை அதிகரித்து, ஊரக வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. தரமான சாலைகள், கிராமப்புற மக்களின் வருமான அளவினை உயர்த்துகிறது.

கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை வழங்கி அறிவாற்றலைப் பரவலாக்கி, சமூகப், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து வளர்ச்சியைத் துரிதப்படுத்த உதவுகிறது. எனவேதான், பேருந்து செல்லக்கூடிய சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், பல்வேறு முக்கிய சேவைகளைக் கிராமங்களுடன் இணைக்கும் சாலைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில்...

அதன்படி, கடந்த 2023ஆம் ஆண்டு ஜன.13ஆம் தேதி அன்று என்னால் சட்டப்பேரவையில் 'முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதன்படி தற்போது வரை 8,120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு - ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழும், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 16 ஆயிரத்தி 596 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கத் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில்...

இதன் மொத்த மதிப்பு 9 ஆயிரத்து 324 கோடியே 49 லட்சம் ரூபாய். இதனை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வருகிற இரண்டு ஆண்டுகளில் 'முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்' மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்பதை இம்மாமன்றத்துக்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்க விரும்புகிறேன்" என்றார். 

இதன்பின்னர் தமிழக பாஜக சட்டப்பேரவைக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "மாநிலம் கட்டமைப்பில் முன்னேற வேண்டுமென்றால் சாலை வசதிகள் முக்கியமானது ஆகையால் முதல்வர் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் மேலும் சாலை போடும்போது இருபுறமும் தடுப்பு அமைக்க வேண்டும். சாலை போடுவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்களை கலந்தாலோசித்து செயல்படுமாறு கேட்டுகொள்கிறேன்" என்றார்.

மேலும் தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில், "இந்தியாபின் இதயமே கிராமம் தான் என மகாத்மா காந்தி தெரிவித்துள்ளார். அதற்கேற்றார்போல் கிராமங்களை வளர்ச்சிபாதையில் எடுத்து செல்வதற்கு ஆன்மாவாக செயல்படுகிறார் முதல்வர். சாலைகள் போடுவதால் கிராமங்களை நோக்கி பல திட்டங்கள் கொண்டு செல்வதற்கு ஏதுவாக இருக்கும். இந்தியாவின் நிகருக்கு நிகராக இருப்பவர் நமது முதல்வர். அதே போல் சட்டமன்ற உறுப்பினர் நிதியை உயர்த்தி தருமாறு கேட்டுகொள்கிறேன்" என்றார். 

மேலும் படிக்க | பாமக தலைவர்கள் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மானநஷ்ட வழக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News