மருத்துவ கலந்தாய்விற்கு ஆதார் கட்டாயம் - உயர்நீதிமன்றம்!

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயம் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Last Updated : Jun 22, 2018, 07:59 PM IST
மருத்துவ கலந்தாய்விற்கு ஆதார் கட்டாயம் - உயர்நீதிமன்றம்! title=

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயம் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பிற மாநிலத்தவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படுவாதாகவும், இரட்டை இருப்பிட சான்றிதழ் மூலம் தமிழக ஒதுக்கீடுகளை பிற மாநிலத்தவர் பெறுவதாகவும் தெரிவித்து புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழக மருத்துவ கலந்தாய்வில் கலந்துக்கொண்ட பிற மாநில மாணவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மருத்துவ சேர்க்கை பெற்ற மாணவர்கள் வேறு மாநிலத்திலும் மருத்துவ சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளனரா என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை வழங்குவது கடினம் எனவும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வு செய்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்வதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதனையடுத்து, இந்த ஆண்டு நடைபெறும் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயம் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணை பயன்படுத்துவதன் மூலம் இரட்டை விண்ணப்ப முறையினை தவிர்க்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த உத்தரவினை குறித்த விபரங்களை இணையதளம் மற்றும் ஊடகங்களின் வாயிலாக மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது!

Trending News