சொத்துகுவிப்பு வழக்குகள்: 2 அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு தடை - உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

Tamil Nadu Latest News Updates: அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கின் மறுவிசாரணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 6, 2024, 01:56 PM IST
  • சொத்து குவிப்பு வழக்குகளை மறுவிசாரணை செய்ய கடந்த மாதம் உத்தரவு
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இன்று இடைக்கால தடை விதிப்பு
  • தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு
சொத்துகுவிப்பு வழக்குகள்: 2 அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு தடை - உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன? title=

Tamil Nadu Latest News Updates: அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கின் மறுவிசாரணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆக. 7ஆம் தேதி அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தற்போது இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர்கள் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதில் தங்கம் தென்னரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், தங்கம் தென்னரசு மனைவி தரப்பில் அபிஷேக் மனு சிங்வி, மூத்த வழக்கறிஞர் முரளிதரன் உள்ளிட்டோர் ஆஜராகினார். எதிர்தரப்பாக தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பிசி ராமன் ஆஜராகினார்.

மேலும் படிக்க | கிசுகிசு : பரவும் காவிமயம்... தூங்கும் ஈரோட்டு இயக்கம்

மனுதாரர்களின் வாதங்கள்

உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள்,"இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான காரணங்களை சுட்டிக்காட்டி ஆவணங்களை சமர்பித்தோம், ஆனால் அதை தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை, இது அப்பட்டமான விதிமுறை மீறல். மேலும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வே விசாரிக்க வேண்டும் என்பது விதிமுறை, ஆனால் இதனை தனி நீதிபதி விசாரித்துள்ளனர்.

நீதிமன்றங்கள் தானாக முன்வைந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது (Suo-Moto) புகழ்பெற்ற சகாரியா வழக்கில் உச்ச நீதிமன்றம் நீதிமன்றங்களுக்கு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளை, தனி நீதிபதி இதில் பின்பற்றவில்லை" என்ற வாதங்கள் முன்வைத்துள்ளன.

இடைக்கால உத்தரவுக்கு காரணம் என்ன?

இதை தொடர்ந்து, அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்குகளை மறுவிசாரணை செய்ய ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த ஸ்ரீனிவாசன் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்குகளின் மறுவிசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததற்கு காரணம் கூறப்படவில்லை என்றாலும் உச்ச நீதிமன்றம் இதுபோல் அனைத்து வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதிக்காது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவில் அடிப்படையில் சில பிழைகள் இருப்பது வெளிப்படையாக தெரியும்பட்சத்தில்தான் இந்த இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் விதிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களில் இதுகுறித்து பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சர்கள் மீதான வழக்குகள்   

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் (2006 - 2011) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோர் தங்களின் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

2006-11ஆம் ஆண்டுகளில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ரூ.44.56 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக 2012ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. அதேபோல், 2006-11ஆம் ஆண்டுகளில் அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி ரூ.76.40 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2012ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது.

தானாக முன்வந்து விசாரணை

லஞ்ச ஒழிப்புத் துறை அளித்த மேல் விசாரணை அறிக்கை அடிப்படையில் 2022ஆம் ஆண்டில் தங்கம் தென்னரசுவை விடுவித்தும், 2023ஆம் ஆண்டில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை விடுவித்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அளித்த இந்த இரு உத்தரவுகளுக்கும் எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்தாண்டு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். 

இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அளித்த இரு உத்தரவுகளை ரத்து செய்து, வழக்குகளை மறுவிசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. செப். 9ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 

மேலும் படிக்க | 2026இல் அதிமுக உடன் இணக்கம்? அண்ணாமலை இல்லாத நேரத்தில்... நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News