சிறை தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் - சசிகலா

Last Updated : May 4, 2017, 10:12 AM IST
சிறை தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் - சசிகலா title=

சொத்து குவிப்பு வழக்கு தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு வழக்கில் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து, நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.

அதன்பின், குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு மற்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் நீதிபதி குன்கா தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் கூறியதாவது:-

சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும்.அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல. ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இவர்களுக்கான தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 90 நாட்களுக்குள் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்பதன் அடிப்படையில், இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

Trending News