வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு - அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், வெள்ள மீட்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தியதுடன், நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 28, 2021, 05:33 PM IST
வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு - அதிகாரிகளுக்கு உத்தரவு title=

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தாழ்வான பகுதிகளில் ஏரிபோல் நீர் தேங்கியிருப்பதுடன், சாலைகளில் ஆறுபோல் தண்ணீர் வேகமாக ஓடுகின்றன. சென்னை ஆவடியில் இதுவரை சுமார் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்திருப்பதால், அப்பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக இன்று ஆய்வு செய்தார். திருவேற்காட்டில் இருந்து ஆய்வுப் பணியை அவர் தொடங்கினார். பத்மாவதி நகருக்கு சென்ற அவர், அப்பகுதியை ஆய்வு செய்த பின்னர் அரசு ஒன்றிய பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி, விரைவாக அனைத்துப் பணிகளும் நடைபெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

stalin

அதன்பிறகு ஆவடிக்கு சென்ற முதலமைச்சர், மழைநீரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் திருமுல்லைவாயில், கணபதி நகர் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், ஆவடி, அம்பத்தூர் எஸ்டேட், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்குமாறு அறிவுறுத்தினார். வீடுகள் சேதம் குறித்தும் கணக்கெடுக்குமாறு உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்த சாலையோர டீ கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ சாப்பிட்டார். அப்போது, பொதுமக்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.

stlina

முதலமைச்சரின் இந்த ஆய்வுப் பணியின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர். 

ALSO READ தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News