எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்க - ராமதாஸ்

Last Updated : Oct 28, 2017, 12:59 PM IST
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்க - ராமதாஸ்  title=

வீண் செலவு மற்றும் கட் - அவுட்களால் பொது மக்கள் அவதி படுவதால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

தமிழ்நாடு மிக மோசமான காலக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போன்று தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் அவற்றைத் தீர்க்க வேண்டிய ஆட்சியாளர்கள் மக்களின் வரிப் பணத்தில் தங்களின் புகழ்பாடும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

உயிருடன் உள்ள தலைவர்களுக்கு பதாகைகள் மற்றும் கட்-அவுட்கள் வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணா, சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. ‘‘தமிழகமெங்கும் கட்-அவுட், பதாகைகள் தான் நிறைந்துள்ளன. என் வீட்டு முன் அமைக்கப்பட்ட இரு பதாகைகள் இன்னும் அகற்றப்படவில்லை.

ஒரு பதாகை அகற்றப்பட்டால் அடுத்த சிறிது நேரத்தில் இன்னொரு பதாகை வைக்கப்படுகிறது. இது தொடர்பாக 1000 வழக்குகள் உள்ளன. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாகை அமைத்தோர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த அரசு செயல்படாததால், மக்கள் குறைகளுடன் நீதிமன்றத்திற்கு வருகின்றனர். அவர்களுக்கு தீர்வு சொல்வதன் மூலம் அரசு செய்ய வேண்டிய பணிகளை நீதிமன்றம் செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் நீதிமன்றத்திற்குள் இருப்பதால் வெளியில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது என நினைக்க வேண்டாம். அனைத்தும் எங்களுக்குத் தெரியும். ஒருவேளை வெளியில் நடப்பதை நாங்கள் கண்டுகொள்ளக்கூடாது என்றால் முகமூடி வாங்கித் தாருங்கள். நாங்கள் அணிந்து கொள்கிறோம்’’ என நீதிபதி சத்தியநாராயணா கூறினார்.

தமிழக அரசு மீது இதை விட கடுமையாக சாட்டை வீச முடியாது. தமிழக அரசு செயல்படவில்லை; பதாகை அமைப்பதில் தான் தீவிரமாக உள்ளது என்றக் குற்றச்சாற்றை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால், தடித்த தோல் கொண்ட அரசுக்கு இதெல்லாம் உறைக்காது. திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பதாகைகள் அனைத்தையும் 26.10.17 அன்று மாலை 4.30 மணிக்குள் அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அவற்றை அதிகாரிகள் அகற்றவில்லை. நூற்றாண்டு விழா முடிவடைந்த பிறகு தான் அவை அகற்றப்பட்டன. உயர்நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கும் ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிப்பர்?

மக்களின் உணர்வுகளையோ, எதிர்ப்புகளையோ சிறிதும் மதிக்காக முதல்வரும், துணை முதல்வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மாவட்டத்துக்கு மாவட்டம் மாபெரும் விழாக்களை நடத்தி தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர். தமிழக முதலமைச்சராக தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவி வகித்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை. சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட ஏழைகள் பயனடையும் வகையில் பலத் திட்டங்களைச் செயல்படுத்திய அவரது நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும். ஆனால், எடப்பாடியும், பன்னீர்செல்வமும் நடத்துவது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அல்ல. மாறாக, மக்கள் வரிப் பணத்தில் தங்கள் புகழ் பாட நடத்திக் கொள்ளும் விழா ஆகும். உண்மையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கடந்த ஆண்டே நிறைவடைந்து விட்டது. அப்போது யாருக்கோ பயந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தாதவர்கள் இப்போது அவ்விழாவை நடத்துகின்றனர்.

ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா நடத்தும் போது அந்தத் தலைவரின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களைப் பொருத்தவரை அனைத்திலும் முன்னிலைப் படுத்தப்படுத்தப்பட்டவர்கள் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் தான். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் தங்களின் கட்-அவுட்டுகளை 60 அடி உயரத்துக்கு அமைத்துக் கொண்ட பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் தங்களின் காலடியில் 5 அடி உயரத்திற்கு எம்.ஜி.ஆரின் பதாகைகளை அமைத்தனர். இதை விட எம்.ஜி.ஆரை இழிவுபடுத்த முடியாது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களால் மக்களுக்கும் எந்த பயனும் இல்லை. மாறாக நூற்றாண்டு விழா நடந்த அனைத்து ஊர்களிலும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்கள் தான். மதுரையில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கிய நூற்றாண்டு விழா இதுவரை திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, கரூர், தருமபுரி, விருதுநகர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை ஆகிய 21 மாவட்டங்களில் நடந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இவ்விழாக்களால் போக்குவரத்து நெரிசல், கட்டாய பண வசூல், மாணவர்களை மிரட்டி விழாக்களுக்கு அழைத்துச் செல்லுதல் என அனைத்து வழிகளிலும் விதிமீறல்கள் அரங்கேற்றப்பட்டன. ஒவ்வொரு விழாவுக்கும் குறைந்தபட்சம் ரூ.10 கோடி செலவழிக்கப்பட்டதாக அதிமுகவினரே பெருமை பேசுகின்றனர். அத்தனையும் மக்கள் வரிப்பணமாகும்.

தமிழகத்தில் இப்போது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. தமிழகத்தின் நிதிநிலை மோசமடைந்து நியாயவிலைக்கடை சர்க்கரையின் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை அனுமதிக்க முடியாது. அதுமட்டுமின்றி சென்னை உட்பட மீதமுள்ள 11 மாவட்டங்களில் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படும் போது மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, மீதமுள்ள 11 மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்ய வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Trending News