அஸ்வின் இடத்திற்கு ஆள் கிடைச்சாச்சு... எதிரணிகளை கலங்கடிக்கும் இளம் ஆல்ரவுண்டர் - யார் தெரியுமா?

Team India: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தால், இந்திய அணியில் அவர் இடத்தை நிரப்ப யார் இருக்கிறார் என்ற கேள்வி நீண்ட நாள்களாக ரசிகர்கள் மனதில் இருக்கிறது. அந்த வகையில், இந்த இளம் ஆல்ரவுண்டர் ஒருவர் அஸ்வினுக்கு மாற்றாக நிச்சயம் வருவார். அவர் யார், அவரின் ஆட்ட விவரங்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 5, 2024, 04:52 PM IST
  • இரானி கோப்பையில் மும்பை சாம்பியனானது.
  • 27 ஆண்டுகளுக்கு பின் மும்பை இரானி கோப்பையை வென்றது.
  • அதற்கு இந்த இளம் ஆல்ரவுண்டர் இன்று அடித்த சதம் முக்கிய காரணமாகும்.
அஸ்வின் இடத்திற்கு ஆள் கிடைச்சாச்சு... எதிரணிகளை கலங்கடிக்கும் இளம் ஆல்ரவுண்டர் - யார் தெரியுமா? title=

Back Up Player For Ravichandran Ashwin, Team India: இந்தியாவின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரில் இரானி கோப்பை தொடர் மிக முக்கியமானது எனலாம். இரானி கோப்பை தொடரில் கடந்த சீசனின் ரஞ்சி கோப்பை சாம்பியன் அணியும், அவர்களை எதிர்த்து Rest Of India அணியும் மோதும். அதாவது Rest Of India என்பது பல ரஞ்சிகளின் அணிகளின் வீரர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான இரானி கோப்பை தொடரில் (Irani Cup 2024) கடந்த ரஞ்சி கோப்பை தொடரை வென்ற அஜிங்கயா ரஹானே தலைமையிலான மும்பை அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான Rest Of India அணியும் மோதின. 

கடந்த அக். 1ஆம் தேதி அன்று லக்னோவில் உள்ள எகானா மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) டாஸ் வென்று மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். சிவப்பு களிமண் ஆடுகளம் வழங்கப்பட்டது. அது பேட்டிங்கிற்கு பெரியளவில் உதவியது. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 537 ரன்களை குவித்து ஆல்-அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் மும்பை அணிக்கு அதிகபட்சமாக சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) 222 ரன்களை குவித்து மிரட்டினார். அஜிங்கயா ரஹானே 97, தனுஷ் கோட்டியான் 64, ஷ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களை குவித்தனர். Rest Of India பந்துவீச்சை பொறுத்தவரை முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளையும், சரண்ஷ் ஜெயின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இரானி கோப்பை: மும்பை சாம்பியன்... 

அதன்பின், மூன்றாவது நாள் பேட்டிங்கை தொடங்கிய Rest Of India நான்காவது நாள் மதியம் வரை பேட்டிங் செய்து 416 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதில் அபிமன்யூ ஈஸ்வரன் 191 ரன்களை அதிகபட்சமாக அடித்தார். அடுத்தபடியாக துருவ் ஜூரேல் 93 ரன்களை குவித்தார். இவர்களை தவிர யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. மும்பை பந்துவீச்சில் தனுஷ் கோட்டியான், ஷம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மோகித் அவஸ்தி 2 விக்கெட்டுகளையும், முகமது ஜூனத் கான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் வெறும் 9 ரன்களை எடுத்து ஏமாற்றமளித்தார். 

மேலும் படிக்க | ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் ஆப்பு... இந்திய அணியில் இடத்தை தட்டிபறிக்கும் மற்றொரு வீரர்...!

தொடர்ந்து, 121 ரன்கள் முன்னிலையுடன் நேற்று மதியம் மும்பை பேட்டிங்கை தொடங்கி இன்று மதியம் வரை ஆல்-அவுட்டாகாமல் தொடர்ந்து விளையாடி ஆட்டத்தை டிராவில் முடித்தனர். மும்பை அணியில் தனுஷ் கோட்டியான் நிலைத்து நின்று ஆடி முதல் தர போட்டியில் அவரது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 114 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், பிருத்வி ஷா 76 ரன்களையும், டெயிலெண்டரான மோகித் அவஸ்தி 51 ரன்களையும் குவித்து மும்பையின் ஸ்கோரை பெரியளவுக்கு கொண்டுசென்றனர். சுமார் 450 ரன்கள் முன்னிலை பெற்ற உடன் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. இன்னும் ஒரே ஒரு செஷன்தான் இருந்ததால் Rest Of India அடுத்து பேட்டிங் வராமலேயே போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால், இந்தாண்டின் இரானி கோப்பை சாம்பியனாக மும்பை அணி அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், 27 ஆண்டுகளுக்கு பின் மும்பை அணி இரானி கோப்பையை வென்றுள்ளது. ரஞ்சி கோப்பையை (Ranji Trophy) தொடர்ந்து ரஹானே தலைமையில் மும்பை அணி இந்தாண்டின் இரானி கோப்பையையும் வென்றுள்ளது. மொத்தமாக 30ஆவது முறையாக இரானி கோப்பையில் விளையாடி 15ஆவது முறையாக கோப்பையை முத்தமிட்டுள்ளது. 

ஜொலித்த தனுஷ் கோட்டியான்!

இந்த போட்டியின் வெற்றிக்கு சர்ஃபராஸ் கானின் பேட்டிங், ரஹானேவின் கேப்டன்ஸி, நேர்மறையான அணுகுமுறை ஆகியவற்றுடன் இந்த வீரரின் சிறப்பான செயல்பாடுதான் முக்கிய காரணியாகும். ஆட்ட நாயகன் விருதை சர்ஃபராஸ் கான் பெற்றாலும் கூட, இவரின் இன்றைய ஆட்டமும், முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சும்தான் மும்பைக்கு இரானி கோப்பையை 27 ஆண்டுகளுக்கு உறுதிசெய்துள்ளது. இவரின் பெயரை வெற்றிக்கு பின் குறிப்பிட்டு பேசினார், கேப்டன் ரஹானே... அந்த வீரர் வேறு யாருமில்லை, அவர் பெயர் தனுஷ் கோட்டியான் (Tanush Kotian). இந்த பெயரை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் வருங்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக வர அதிக வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | அஸ்வினின் புதிய சாதனை! உலகளவில் இதுவரை யாருமே செய்தது இல்லை!

நல்ல உயரம், நீண்ட மற்றும் வலுவான கை விரல்களை கொண்ட ஆஃப் ஸ்பின்னரான தனுஷ் கோட்டியான் 8ஆவது வீரராக இறங்கி முதல் தர போட்டியில் பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். 25 வயதை நெருங்கும் தனுஷ் கோட்டியானுக்கு இன்னும் 10 நாள்களில் பிறந்தநாள் வருகிறது. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் முதல்தர போட்டிகளில் விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடும் இவர் 30 முதல் தர போட்டிகளில்  88 விக்கெட்டுகளையும், 19 லிஸ்ட் ஏ போட்டிகளில் 20 விக்கெட்டுகளையும், 24 டி20 போட்டிகளில் 24 விக்கெட்டுகளையம் வீழ்த்தி உள்ளார்.

மிரட்டிய ஆல்-ரவுண்டர் 

பந்துவீச்சில் கலக்கும் இவர் பேட்டிங்கிலும் மிரட்டுகிறார். இந்த இரானி கோப்பையில் முதல் இன்னிங்ஸில் 64 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 114 ரன்களை குவித்துள்ளார். இவர் கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 41.83 என்ற சராசரியில் 502 ரன்களை குவித்துள்ளார். அதிலும் 5 அரைசதங்கள், 1 சதம் அடக்கம்.  பந்துவீச்சிலும் 29 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார். குறிப்பாக, கடந்த ரஞ்சி தொடரில் பரோடா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் 120* ரன்களை குவித்தது மட்டுமின்றி, அரையிறுதியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக 89* ரன்களையும் குவித்து கவனம் ஈர்த்தார். கடந்த மாதம் நடந்து முடிந்த துலிப் டிராபி தொடரில் இந்தியா D அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் 53 ரன்களை விளாசியிருந்தார்.

அஸ்வினுக்கு பின்... 

ரவிசந்திரன் அஸ்வினுக்கு (Ravichandran Ashwin) பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு ஆஃப் ஸ்பின் ஆல்-ரவுண்டர்கள் கிடைப்பார்களா என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அனைவருக்கும் தனுஷ் கோட்டியான் தனது ஆட்டத்தின் மூலம் பதில் கொடுத்துள்ளார். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ரவிசந்திரன் அஸ்வின். அவருக்கு தற்போது வயது 38.

ஒருவேளை, அஸ்வின் இந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியுடன் ஓய்வு பெற அதிக வாய்ப்பிருக்கிறது. அதன்பின் அந்த இடத்தை நிரப்ப தனுஷ் கோட்டியான் நல்ல தேர்வாக இருப்பார். அஸ்வின் போல் ஆட்ட நுணக்கங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர் இல்லையென்றாலும், தனுஷ் கோட்டியானுக்கு தக்க வழிகாட்டுதல் கிடைத்தால் நிச்சயம் அவர் இந்தியாவின் நம்பிக்கைமிக்க எதிர்கால ஆல்-ரவுண்டராக ஜொலிப்பார் என நம்பலாம். தனுஷ் கோட்டியானும் கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியது கவனிக்கத்தக்கது.  

மேலும் படிக்க | கலக்கத்தில் கேஎல் ராகுல்! காரணம் சர்ஃபராஸ் கான் தான்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News