36 ஆயிரம் கோயில் கடைகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36 ஆயிரம் கோயில்களில் செயல்பட்டு வரும் வணிக ரீதியிலான கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Mar 22, 2018, 03:39 PM IST
 36 ஆயிரம் கோயில் கடைகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு! title=

தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36 ஆயிரம் கோயில்களில் செயல்பட்டு வரும் வணிக ரீதியிலான கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி இரவு 11:30 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த 30-ம் மேற்பட்ட கடைகள் தீயினால் பாதிக்கப்பட்டது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபம் இடிந்து விழுந்தது. எனவே மண்டபத்தை சீரமைக்கவும், தீ விபத்து குறித்த காரணத்தை கண்டறியவும் 12 நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தது தமிழக அரசு.

இதையடுத்து பழனி அடிவாரத்தில் உள்ள மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளை 15 நாட்களுக்குள் அகற்றுமாறு கடந்த பிப்ரவரி 21-ந் தேதி பழனி கோயில் அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கு கடை நடத்தி வந்த 7 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, கோயில் வளாகம் முழுவதும் தரமாக பராமரிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36 ஆயிரம் கோயில்களில் செயல்பட்டு வரும் வணிக ரீதியிலான கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும்.

இதற்கான சுற்றறிக்கையை அறநிலையத்துறை செயலர் மற்றும் ஆணையர் அனுப்ப வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Trending News