இரண்டாவது டி-20 போட்டி: நாளை இந்தியா vs ஆஸ்திரேலியா; தொடர் யாருக்கு?

நாளை கடைசி மற்றும் இரண்டாது 20 ஓவர் போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 26, 2019, 08:09 PM IST
இரண்டாவது டி-20 போட்டி: நாளை இந்தியா vs ஆஸ்திரேலியா; தொடர் யாருக்கு? title=

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய வீரர் ரோகித் ஷர்மா 5(8) ரன்களில் வெளியேற, மறுமுனையில் இருந்து லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 24(17) ரன்களில் வெளியேறினார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய டோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் 3 விக்கெட்டுகளை குவித்தார்.

இதனையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆர்க்கி சார்ட் 37(37), மார்கஸ் ஸ்டோனிக்ஸ் 1(5) ரன்களில் வெளியேற இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். எனினும் கெளன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 56(43) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இவரது விக்கெட்டை இழந்த நிலையில் அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர், ஒரு கட்டத்தில் இந்தியாவின் வெற்றி உறுதியானது. இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற நிலைக்கு ஆஸி., தள்ளப்பட்டது. ரசிகர்களை இருக்கையின் முனையில் உட்கார வைத்த இந்த போட்டியின் இறுதி பந்தில் ஆஸித்திரேலியா வெற்றி இலக்கை எட்டியது. இந்தியா தரப்பில் ஜாஸ்பிரிட் பூம்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இப்போட்டியின் வெற்றியின் மூலம் டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நாளை பெங்களூரு எம்.சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது. எனவே இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே டி-20 தொடர் சமநிலையில் முடியும். தோல்வி அடைந்தால் தொடரை ஆஸ்திரேலியா அணி வென்றுவிடும். 

நாளை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமநிலை படுத்தும் என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா? விராட் தலைமையிலான இந்திய அணி என்று நாளை பார்ப்போம்.

Trending News