இந்திய - ரஷியா உறவு நிலையானது- விளாதிமீர் புதின்

Last Updated : Jun 2, 2017, 08:44 AM IST
இந்திய - ரஷியா உறவு நிலையானது- விளாதிமீர் புதின்  title=

இந்திய - ரஷியா இடேயான உறவு நிலையா உறவாகும். இந்த உறவுகளை நீர்த்துப் போகச் செய்ய முடியாது. 

பாகிஸ்தானுடன் வலுவான ராணுவ உறவுகளை ரஷியா கொண்டிருக்கவில்லை. இந்தியா - ரஷியா இடையிலான வர்த்தக உறவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார். 

ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அதைத் தொடர்ந்து ரஷியா சென்றடைந்தார். அதிபர் விளாதிமீர் புதினின் சொந்த நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அவருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 

புதினுடன் இரு தரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது:-

பொதுவாக சர்வதேச உறவுகள் ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும். ஆனால் இந்திய-ரஷியா உறவுகள் ஏற்ற இறக்கங்களைக் காணவே இல்லை என்பதற்கு சரித்திரமே சாட்சி. இந்த உறவுகள் நிலையானவை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா இன்னும் ஒரு வாரத்துக்குள் முழு அளவிலான உறுப்பினராகும் என்று புதின் கூறினார். இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு முக்கிய பங்காற்றியதற்காக புதினுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் சீனாவின் ஷாங்காய் நகரில் எஸ்சிஓ அமைப்பை ஏற்படுத்தின.

ரஷியாவும் இந்தியாவும் தூதரக உறவுகளை ஏற்படுத்தி இந்த ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைவதாக மோடியுடன் புதின் தெரிவித்தார்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பேட்டி:-

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறதா என்று மதிப்பிடுவது உங்களைப் (செய்தியாளர்கள்) பொறுத்தது. ஆனால் பயங்கரவாத அச்சுறுத்தல் எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம்.

இந்தியா-ரஷியா இடையிலான உறவுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. அவை நிலையானவை. அந்த உறவுகளை நீர்த்துப் போகச் செய்ய முடியாது. இந்தியாவுடன் ரஷியா சிறப்பான உறவுகளைக் கொண்டிருப்பதாலேயே, மற்ற தோழமை நாடுகளுடன் இந்தியா கட்டுப்பாடான உறவுகளையே கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அப்படிக் கூறுவது கேலிக்கூத்தானது.

இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. ரஷியாவும் ஒரு பெரிய நாடு. ரஷியாவும் இந்தியாவும் பல்வேறு பரஸ்பர நலன்களைக் கொண்டுள்ளன. இந்திய நலன்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

இரு நாடுகளிடையே விரிவான பாதுகாப்புத்துறை உறவுகள் இருக்கின்றன. எங்களிடையிலான ராணுவ உறவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. ஏவுகணைகள் உள்ளிட்ட சிக்கலான துறைகளிலும் ரஷியா ஆழமான உறவுகளை இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டுடனும் கொண்டிருக்கவில்லை.

இந்தியாவுடனான ஒத்துழைப்பால் நாங்கள் பயனடைகிறோம். இந்தியாவுடனான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உறவுகள் மூலமே இது சாத்தியமாகிறது.

இந்தியாவும், ரஷியாவும் அனைத்து விவகாரங்கள் குறித்தும் வெளிப்படையான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. இந்தியா எங்களது நெருங்கிய தோழமை நாடாகும். நாங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டுள்ளது மட்டுமின்றி ஒருவரையொருவர் ஆதரிக்கவும் செய்கிறோம் என்றார் புதின்.

முன்னதாக, 2-ம் உலகப் போரில் உயிரிழந்த புதினின் சகோதரர் உள்ளிட்ட ரஷிய ராணுவ வீரர்களின் கல்லறைக்கு மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். புதினின் சகோதரர் 70 ஆண்டுகளுக்கு முன் லெனின்கிராட் நகர் முற்றுகையிடப்பட்டபோது கொல்லப்பட்டார்.

Trending News