Children’s Day 2020: குழந்தைகள் தின விழாவின் வரலாறும் முக்கியத்துவமும்

இந்தியாவில் குழந்தைகள் தினம் குழந்தைகளுக்கு வேடிக்கையான மற்றும் சுவாரசியமான நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2020, 09:51 AM IST
  • நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • நமது முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளை நாம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
  • வழக்கமாக இந்த நாளில் நாடு முழுவதும் பலவித கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
Children’s Day 2020: குழந்தைகள் தின விழாவின் வரலாறும் முக்கியத்துவமும் title=

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் இந்தியா முழுவதும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிதர் ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru) நவம்பர் 14, 1889 இல் பிறந்தார். அவர் குழந்தைகள் மீது மிகவும் அன்பு கொண்டவராக இருந்தார். அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை நாம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

குழந்தைகள் நேருவை பாசமாக ‘நேரு மாமா’ என்று அழைத்தனர். குழந்தைகளை அவர் ஒரு தேசத்தின் உண்மையான பலமாகவும் சமூகத்தின் அஸ்திவாரமாகவும் கருதினார். குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அதீத அன்பு மற்றும் அவர்களது முன்னேற்றத்தில் அவர் காட்டிய அக்கறை ஆகியவற்றின் காரணமாக அவரது பிறந்த நாளை நாம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

“இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்” என்று நேரு ஒருமுறை கூறியிருந்தார்.

ALSO READ: Diwali 2020: நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார் பிரதமர் மோடி

குழந்தைகள் தின வரலாறு

முன்னதாக, குழந்தைகள் தினம் (Children's Day) நவம்பர் 20 அன்று அனுசரிக்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகள் சபையால் உலகளாவிய குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், 1964 இல் நேரு இறந்த பிறகு, இந்தியாவின் முதல் பிரதமரின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக குறிக்கும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குழந்தைகள் தின முக்கியத்துவம்

இந்தியாவில் குழந்தைகள் தினம் குழந்தைகளுக்கு வேடிக்கையான மற்றும் சுவாரசியமான நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு பொம்மைகள், இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பண்டிதர் ஜவஹர்லால் நேருவுக்கு அஞ்சலி செலுத்தப்படுவதோடு, இந்த நாளில், குழந்தைகளின் உரிமைகள், கவனிப்பு மற்றும் கல்வி பற்றியும் பலரால் கலந்தாலோசிக்கப் படுகிறது.

வழக்கமாக இந்த நாளில் நாடு முழுவதும் பலவித கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோய் காரணமாக கொண்டாட்டங்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. 

ALSO READ: தீபங்களின் திருநாள் தீபாவளி: மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News