சேதமான கார்கள்... மயங்கி விழுந்த பெண் - இந்திய அணியின் ரோட் ஷோவால் ஏற்பட்ட பாதிப்புகள்!

Team India Roadshow: இந்திய கிரிக்கெட் அணியின் ரோட் ஷோவுக்கு பின்னர், அது நடைபெற்ற மரைன் டிரைவ் சாலையில் நின்ற பல்வேறு கார்கள் சேதமடைந்திருக்கின்றன. மக்கள் கூட்டத்தால் ஏற்பட்ட சேதங்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 5, 2024, 08:10 AM IST
  • இந்திய அணியின் ரோட் ஷோ நேற்று நடைபெற்றது.
  • இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர்.
  • மழைக்கு மத்தியிலும் ரசிகர்கள் தங்களின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
சேதமான கார்கள்... மயங்கி விழுந்த பெண் - இந்திய அணியின் ரோட் ஷோவால் ஏற்பட்ட பாதிப்புகள்! title=

Team India Roadshow: மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பை, நாட்டின் வணிக தலைநகராக பார்க்கப்படுகிறது. கடலோர நகரமான இது நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களின் போக்குவரத்தை எதிர்கொள்கிறது. நாட்டின் மிக மக்கள் நெருக்கடி கொண்ட பகுதியான மும்பையில்தான் நேற்று டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கான பாராட்டு விழாவும், வீரர்களின் மாபெரும் பேரணியும் நடைபெற்றது.

கரீபியன் தீவான பார்படாஸில் இருந்து டி20 உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு பாராட்டு விழாவில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.125 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தொடர்ந்து வீரர்கள் வான்கடே மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் கொண்டாட்டத்தில் இணைந்துகொண்டனர். 

மழையையும் பாராமல்...

இந்த பாராட்டு விழாவுக்கு முன் மும்பை மரைன் டிரைவ் பகுதியில் நடைபெற்ற இந்திய அணியின் மாபெரும் ரோட் ஷோ தான் நேற்றைய முக்கிய பேசுப்பொருளாக இருந்தது. முன்னர் கூறியதுபோல், கடும் போக்குவரத்து நெருக்கடி கொண்ட மும்பையில் அவ்வளவு பெரிய பேரணி நடைபெற்றது பலரையும் வியக்க வைத்தது. அந்த பேரணியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணி வீரர்களை கொண்டாடித் தீர்த்தனர். மழை பெய்த போதிலும் தங்களின் கொண்டாட்டத்தை தொடர்ந்தனர். 

மேலும் படிக்க | ஹத்ராஸ் மதகூட்ட நெரிசல் பலி 166ஆக உயர்ந்தது! சாமியார் விஸ்வ ஹரி போலே பாபா யார்?

சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் டி20 உலகக் கோப்பையைும், 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி கோப்பையையும் வென்ற வெற்றிக் களிப்பு என இதனை நாம் புரிந்துகொண்டாலும் அந்த பேரணிக்கு பின் அந்த ரோட் ஷோ நடந்த மும்பை டிரைவ் என்ன நிலைக்கு ஆளானது என்பதை பார்ப்பதும் அவசியமாகும். பேரணி முடிந்த பின்னர் அது நடைபெற்ற சாலையை பார்த்தோமானால் அனைத்து பக்கமும் குப்பைகளும், காலணிகளும் சிதறிக் கிடப்பதை சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட வீடியோக்களில் பார்க்க முடிகிறது. 

சேதமடைந்த கார்கள்

சாலையில் நடப்பட்டிருந்த கம்பங்கள் உடைக்கப்பட்டுள்ளன. சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்திருக்கின்றன. நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களின் மீது ஏறி நின்று வீரர்களை நோக்கி நடனமாடி தங்களின் கொண்டாட்டத்தை சிலர் வெளிப்படுத்தியதால் கார்கள் சேதமடைந்ததாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். பல ரசிகர்கள் மிக ஆபத்தான முறையில் மரங்களின் மீதும், கட்டடங்களின் மீதும் எவ்வித பாதுகாப்பும் இன்றி ஏறி நின்று டி20 உலகக் கோப்பையை வென்ற தங்களின் நாயகர்களை தரிசித்து மகிழ்ந்தனர். ஒவ்வொருவரின் தோள்களின் மீது ஏறிநின்று வீரர்களின் பேருந்தை நோக்கி ஆரவார கூச்சலிட்டனர். 

மேலும் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ஒரு பெண் மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த பெண்ணை, ஒரு காவலர் அந்த கூட்டத்திற்கு மத்தியில் தனது தோள்களில் சுமந்து காற்றோமான பகுதிக்கு கொண்டு சென்று, மருத்துவ உதவிக்கு கொண்டு சென்றார். ஆனால், பேரணியால் எவ்வித அசம்பாவித சம்பவமும் பதிவாகவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனலாம். அதே நேரத்தில் அந்த பகுதியில் வந்த ஆம்புலன்ஸிற்கு ஒட்டுமொத்த கூட்டமும் வழிவிட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

போக்குவரத்து நெரிசல்

அந்த பேரணியில் கலந்துகொண்ட கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ஊடகத்தில் பேசும்போது,"கூட்டத்தில் பலரும் கீழே சரிந்து விழுந்ததை பார்க்க முடிந்தது. நான் இந்திய அணியின் பேருந்துக்கு பின்னால் இருந்தேன். நான் எனது ஒரு செருப்பு, ஹெட்போன், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கூட்டத்தில் தொலைத்துவிட்டேன். சிலர் தங்களின் மொபைல்களை தொலைத்துவிட்டனர். சில பெண்கள் அவர்களின் ஹண்ட்பேக்குகளை தொலைத்துவிட்டனர்" என்றார். 

இந்திய அணியின் இந்த ரோட் ஷோவால் தெற்கு மும்பை பகுதிகளில் கடும் போக்குவரத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மரைன் டிரைவ் பகுதியில் அவ்வளவு கூட்டம் இருந்ததால் போக்குவரத்து மாறிவிடப்பட்டது. இதனால் அதனை சுற்றிய பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றுள்ளன. ரோட் ஷோவை காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதை அடுத்து, பல பேரை மரைன் டிரைவ் பகுதிக்குள் அனுமதிக்காமல் போலீசார் திருப்பியும் அனுப்பினர். நேற்றைய கொண்டாட்டம் என்பது இந்திய கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் இடையே என்றும் மறக்க இயலாத நிகழ்வாகும். அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட சேதங்களும் பலருக்கும் மறக்க முடியாதாக அமைந்திருக்கும் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 

மேலும் படிக்க | புனே நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்! திக் திக் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News