எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 15 ஆயிரம் வீரர்கள் குவிப்பு

Last Updated : Sep 29, 2016, 01:00 PM IST
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 15 ஆயிரம் வீரர்கள் குவிப்பு title=

உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைபோல பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கான ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. ஆனால் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை  உலக அரங்கில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடு பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்தியாவின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து பூடான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தன.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ மந்திரி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுக்கையில் கூறியதாவது:- எந்த நாடும் எங்கள் மீது போரை திணித்தால் அந்த நாட்டை நாங்கள் அழிப்போம். தேவைப்பட்டால் அணுகுண்டை பயன்படுத்தி இந்தியாவை அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்ர்.

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இது போல் ராஜஸ்தான் ஜெய்சல்மர் பகுதியில் இருந்து 15 முதல் 20 கிலோமீட்டர் தூரத்தில்  சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் தனது படைகளை குவித்து வருகிறது. மேலும் அப்பகுதியில் ராணுவ வாகனங்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

இங்கு பாகிஸ்தான் போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் 15 ஆயிரம் எல்லைபடை வீரர்கள் அங்கு குவிக்கபட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Trending News