ரசாயன ஆயுதங்களை உபயோகித்தால் சிரியாவை தாக்க தயார்!

ரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தினால் சிரியாவை தாக்க தயாராக உள்ளோம் என நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். 

Last Updated : Apr 15, 2018, 10:31 AM IST
ரசாயன ஆயுதங்களை உபயோகித்தால் சிரியாவை தாக்க தயார்!  title=

சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு ரஷ்ய படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. சிரியா அரசு கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றன.

கடந்த 7-ம் தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் முற்றுகையிட்டன. 

இந்த நிலையில், கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியானது.  இந்த தாக்குதலில், ஹெலிகாப்டர் ஒன்றில் இருந்து சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்று குற்றச்சாட்டு தெரிவித்தது.

சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க ரஷியா தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு கூறினார்.

இதனை தொடர்ந்து நேற்று, சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டு படைகள் வான்வழி தாக்குதலை நடத்துகின்றன என டிரம்ப் அறிவித்துள்ளார்.இந்த தாக்குதலுக்கு சிரியாவில் அறிவியல் ஆய்வு மையம் மற்றும் பல்வேறு சிரிய ராணுவ தளங்களும் இலக்காகின.

இந்நிலையில், ஐ.நா. பொது கவுன்சில் அவசர கூட்டத்தில், ரசாயன ஆயுதங்களை சிரியா மீண்டும் பயன்படுத்தினால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம் என அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், நேற்று நடந்த ராணுவ தாக்குதலில் இருந்து ஒரு விசயம் தெளிவாக தெரிந்திருக்கும். ஆசால் தலைமையிலான அரசு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த, தொடர்ந்து அமெரிக்கா அனுமதிக்காது. சிரியாவின் இந்த அழுத்தத்தினை எதிர்கொள்ள நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

Trending News