கல்விக்கண் திறந்த காமராஜர் கண் அயர்ந்த நாள்

எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராசர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர்(king maker), பெருந்தலைவர் என பல அடைமொழிகளுக்கு சொந்தக்காரர். தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாளன்று மறைந்த காமராஜர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2020, 10:55 PM IST
கல்விக்கண் திறந்த காமராஜர் கண் அயர்ந்த நாள் title=

எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராசர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர்(king maker), பெருந்தலைவர் என பல அடைமொழிகளுக்கு சொந்தக்காரர். தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாளன்று மறைந்த காமராஜர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம். 

தேச விடுதலைக்கான வேள்வியில் பங்கேற்ற காமராஜர் 1930ஆம் ஆண்டு மார்ச் மாதம், வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். அப்படி விடுதலைக்கான யாகத்தில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட அவர், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நாட்டு மக்களின் சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மக்கள் தியாகி.  

இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பதவி வகித்த காமராஜர், நேருவின் மரணத்திற்குப் பிறகு இந்தியப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை பதவியில் அமர்த்தினார். சாஸ்திரியின் மரணத்திற்குப் பிறகு இந்திரா காந்தியை பிரதமராக்கினார். இதனால் தான் காமராஜர் king maker என்று அழைக்கப்படுகிறார். 

தமிழகத்தின் முதலமைச்சராகவும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றி, அந்த பதவிகளுக்கு பெருமை சேர்த்தார் கர்மவீரர் காமராஜர். மாநிலத்தின் உள்கட்டமைப்பை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த அவர், ஏழை மற்றும் பின்தங்கியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரும்பாடுபட்டார்.  

காமராஜரின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து 27,000 என்ற அளவை எட்டியது. படிக்காத மேதையாக இருந்த அவர், கல்வியின் அருமையை உணர்ந்தவர். ஏழை மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதற்காக பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்தத் திட்டமே பிற்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டு, உலகிற்கே வழிகாட்டும் திட்டமாக மாறியது. 

ALSO READ | காந்தி ஜெயந்தியன்று நிறைவேறிய காஷ்மீர் பெண்ணின் கனவு!!

காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நாட்டின் முன்னேற்றம், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது, கல்வி மற்றும் தொழிற்துறைக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

காங்கிரசில் செல்வாக்குடன் திகழ்ந்த காமராசர், இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார். நாட்டின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த காமராஜர் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். 1975ஆம் ஆண்ட்டில், காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளன்று காமராஜர் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

மாநில முதலமைச்சராக பதவி வகித்த கர்மவீரர் காமராஜர் இறந்தபோது சிறிதளவு பணத்தைத் தவிர அவரிடம் வேறு எதுவுமே இல்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கலாம். அவருக்கு, வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, எந்த வித சொத்தோ கிடையாது. காமராஜரின் மறைவுக்கு பின், 1976ஆம் ஆண்டில் அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி பெருமைபடுத்தியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும் சூட்டப்பட்டது.

கர்ம்மே கண்ணாக வாழ்நாள் முழுவதும் உழைத்த ஒரு மாமனிதர் இறந்த பிறகு அவரின் பெயரின் விமான நிலையம் இயங்குகிறது. கல்வி பயிலாத பாமரனின் பெயரில் ஒரு பல்கலைக்கழகமே இயங்குகிறது என்பது ஆச்சரியத்தை கொடுக்கவில்லை. அவர் வாழ்ந்த வாழ்வு எப்படி அர்த்தம் உள்ளதாக இருந்த்து என்பதும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்வது எங்கணம் என்பதை உணர்த்தும் வாழ்க்கைப் பாடமாக அமைந்துள்ளது.

Read Also | Gandhi Jayanthi 2020: பல நலத்திட்டங்களுடன் இந்த நன்நாளை கொண்டாடுகிறது இந்தியா!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News