தேர்தல் முடிவுக்கு பிறகு இன்று ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்

இன்று மாலை திமுக எம்பிக்களின் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலினின் தலைமையில் நடக்க உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 25, 2019, 10:31 AM IST
தேர்தல் முடிவுக்கு பிறகு இன்று ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் title=

சென்னை: இன்று மாலை திமுக எம்பிக்களின் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலினின் தலைமையில் நடக்க உள்ளது.

நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் வேலூரை தவிர்த்து 39 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த மே 23 ஆம் தேதி அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக பெற்றி பெற்றுள்ளது. 

இதன்மூலம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். இதற்கு நன்றி கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், "நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!" எனக் கூறினார்.

இந்த நிலையில், இன்று மாலை திமுக எம்பிக்களின் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள புதிய எம்பிக்களுக்கும் சேர்த்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகு மு.க. ஸ்டாலினின் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News