இனி கஞ்சா வளர்ப்பதற்கும், வைத்திருப்பதற்கும் அனுமதி... இந்த நாட்டில் - காரணம் என்ன?

World Bizarre News: இனி 18 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் கஞ்சா வளர்ப்பதும், வைத்திருப்பதும் ஜெர்மனியில் சட்டப்பூர்வமாகி உள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 25, 2024, 01:43 AM IST
  • புதிய சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
  • ஏப்ரல் மாதம் முதல் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்.
  • எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இனி கஞ்சா வளர்ப்பதற்கும், வைத்திருப்பதற்கும் அனுமதி... இந்த நாட்டில் - காரணம் என்ன? title=

World Bizarre News: தமிழ்நாடு என்றில்லை உலகம் முழுவதுமே மதுபழக்கம், புகை பழக்கம் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள் அதிகம் காணப்படுகின்றன. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை விதவிதமான போதை பழக்கங்களுக்கு அடிமையாவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒருபுறம் இருக்க தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளின் பயன்பாடும் அதுசார்ந்த வியாபாரம் உலகளவில் பெரும் கவனத்தை பெறுகிறது. பூகோள அரசியலில் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருள்களின் தாக்கம் அளவிட இயலாதது. 

இருப்பினும், சிலவற்றை சட்ட ரீதியிலாக கட்டுப்படுத்துவதன் மூலம் அதன் மீதான அடிமையாதல் போன்ற தீவிர பிரச்னைகளை தவிர்க்க வாய்ப்பிருக்கிறது என்பது பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சில நாடுகளில் கஞ்சா உள்பட பல போதை வஸ்துகள் சட்ட ரீதியான கட்டுப்பாட்டுடன் புழக்கத்தில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது, கஞ்சா வைத்திருப்பதை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஜெர்மன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

புதிய சட்ட விதிகள்...?

ஜெர்மனின் சில எதிர்க்கட்சிகள் மற்றும் போதை ஒழிப்பு அமைப்புகளின் எதிர்ப்புகள் ஒருபுறம் இருக்க, ஜெர்மன் நாடாளுமன்றம் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதற்கும், கஞ்சா செடியை வளர்ப்பதற்கும் கட்டுப்பாடுகளை விதித்து சட்டம் கொண்டு வந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் அமலாகிறது என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ் மக்களுக்கு பல விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.  

மேலும் படிக்க | Norovirus: அமெரிக்காவில் பீதியை கிளப்பும் நோரோவைரஸ்! உயரும் பலி எண்ணிக்கை...

இதன்படி, கஞ்சா வளர்ப்பு கூட்டமைப்பின் கீழ் ஒருவர் ஒரு நாள் ஒன்றுக்கு 25 கிராம் வரை கஞ்சா பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் மூன்று கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 18 வயதுக்குட்பட்டோர் கஞ்சா வைத்திருப்பதும், கஞ்சாவை பயன்படுத்துவதும் சட்ட விரோதமானது என இந்த புதிய சட்டம் தெளிவுப்படுத்தி உள்ளது.

கருத்துக்கணிப்பு

ஜெர்மன் மக்களிடம் இந்த புதிய சட்டம் குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இருவேறு பதில்கள் கிடைத்துள்ளது. இதன்மூலம், அவர்கள் எதன் பக்கத்தில் நிற்கிறார்கள் என்பதை தீர்மானிக்க இயலவில்லை.  நேற்று வெளியிடப்பட்ட YouGov கருத்துக்கணிப்பின்படி, 47 சதவீதம் பேர் இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவாகவும், 42 சதவீதம் பேர் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஜெர்மனியில் கஞ்சாவை பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. கள்ளச் சந்தையில் இளைஞர்கள் கஞ்சாவை பெற்று, அதிகமாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாவதை தடுக்க ஆக்கப்பூர்வமான செயல்பாடாக இதனை அரசு பார்க்கிறது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

இதுகுறித்து, ஜெர்மன் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக, அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் கூறுகையில், "நாம் இப்போது இருக்கும் சூழ்நிலை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார். அரசு சார்பில் பல சமாதனங்களும், விளக்கங்களும் முன்வைக்கப்பட்டாலும் எதிர்க்கட்சிகள் தங்களின் விமர்சனங்களை முன்வைக்க தயங்கவில்லை. 

எதிர்கட்சியினர், "இந்த புதிய சட்டம் இளைஞர்களுக்கு உடல்நல அபாயங்களை மட்டுமே அதிகரிக்கும். அரசு கூறுவது வெறும் வாய் வார்த்தையாகவே இருக்கிறது" என்றும் குற்றஞ்சாட்டுகின்றன. மேலும், ஸ்கோல்ஸின் கூட்டணி அரசாங்கம் தங்களின் சித்தாந்தத்திற்காகவே இதுபோன்ற சட்டத்தை இயற்றுவதாகவும், நாட்டுக்காக அல்ல எனவும் எதிர்கட்சி தரப்பு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. மருத்துவ சங்கங்கள் மற்றும் சுகாதார குழுக்களால் இந்த புதிய சட்டம் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

மேலும் படிக்க | 2 ஆண்டுகள் ஆனாலும் போர் இயந்திரம் ஓயவில்லை! ரஷ்யா மீது புதிதாக 500 தடைகள் விதித்தது அமெரிக்கா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News