ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது ஊழல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி

நேர்மை, நியாயம், நீதியை காப்பாற்ற தமிழக அரசு உனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2018, 04:46 PM IST
ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது ஊழல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி title=

நேர்மை, நியாயம், நீதியை காப்பாற்ற தமிழக அரசு உனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறியதாவது:-

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மீது கொடுக்கப்படும் ஊழல் புகார்கள் அனைத்தும் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் “ஆமை வேகத்தில்” கூட நகர முடியாமல் தேங்கிக்கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட போலீஸ் டி.ஜி.பி.க்கள் மீது வருமான வரித்துறை அளித்த “குட்கா” டைரி தொடர்பான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டதால் இறுதியில் அந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றமே சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி, அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டிலும், அவரது அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டு பற்றிய அறிக்கை தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டு, அதுவும் தற்போது லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் முடங்கிக் கிடக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மீது கொடுக்கப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அமைதி காத்தது. பிறகு கழகத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றமே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

அந்த விசாரணையை மேற்கொள்ள, செப்டம்பரில் ஓய்வு பெற இருக்கும் திருநாவுக்கரசு என்ற கூடுதல் டி.எஸ்.பி.யை போலீஸ் அகாடமியிலிருந்து அவசர அவசரமாக லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு மாற்றி, அவர் மூலம் அந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெறுகின்றன என்று செய்திகள் வருகின்றன.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஊழல்கள் குறித்து விசாரித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, அதுவும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அதிமுக அமைச்சர்கள், துணை முதலமைச்சர், முதலமைச்சர் ஆகியோர் மீது உள்ள ஊழல் புகார்களை விசாரிக்கும் இந்த லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் இணை இயக்குனரான ஐ.ஜி. மீது, இப்போது ஒரு பெண் எஸ்.பி.யே பாலியல் புகார் அளித்து, அந்தப் புகாரை , “விசாகா கமிட்டி” அடிப்படையில் 
தற்போது அவசரம் அவசரமாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் டி.ஜி.பி. தலைமையிலான “துறை சார்ந்த விசாரணைக் கமிட்டி” நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது.

அதற்கு முன்பாகவே, பாலியல் தொல்லைக்கு உள்ளான எஸ்.பி. லஞ்ச ஊழல் தடுப்புத் துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். ஆனால், புகாருக்கு ஆளாகியுருக்கும் அதே துறையின் இணை இயக்குநர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யின் கீழ்தான் அதிமுக அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை உள்ள அனைத்து லஞ்ச ஊழல் புகார்களும் விசாரணையில் இருப்பதை இந்த நேரத்தில் மறந்து விட முடியாது. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். ஆனால் இப்படியொரு கடுமையான குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒரு அதிகாரியை வைத்து லஞ்சப் புகார்களை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்? எப்படி ஊழல்மீது நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆகவே, அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை அனுப்பியுள்ள அறிக்கை விவரங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளியிட்டு, அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கவும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான ஊழல் வழக்கினை ஓய்வு பெறப் போகும் அதிகாரியை வைத்து விசாரிப்பதற்குப் பதிலாக, லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியையே விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரிக்கவும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், மாநில விஜிலென்ஸ் ஆணையர், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேர்மை, நியாயம், நீதியைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, புகாருக்குள்ளான இணை இயக்குனரின் கீழ் நடைபெறும் இந்த ஊழல் விசாரணைகள் நிச்சயமாக பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக நடைபெறாது என்பதால், அவரை உடனடியாக மாற்றி விட்டு, நேர்மையான ஒரு ஐ.ஜி.யை இணை இயக்குனராக நியமித்து, இந்த ஊழல் வழக்குகளை எல்லாம் விரைவாகவும் முறையாகவும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Trending News