தமிழ்நாட்டின் பெருமைகளைக் காப்போம் - MK ஸ்டாலின்!

தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளான இன்று, தமிழ்நாட்டின் பெருமைகளை காக்க உறுதியேற்போம் என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

Last Updated : Jul 18, 2018, 03:10 PM IST
தமிழ்நாட்டின் பெருமைகளைக் காப்போம் - MK ஸ்டாலின்! title=

தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளான இன்று, தமிழ்நாட்டின் பெருமைகளை காக்க உறுதியேற்போம் என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களால் "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று. எழுச்சியூட்டும் இந்த நன்னாளில், நமது பண்டைய வரலாற்று நிகழ்வுகளை நினைவில் தாங்கி, தமிழகத்தின் உரிமைகளையும் தனிச்சிறப்புமிக்க விழுமியங்களையும் காக்கவும் மீட்கவும் உறுதியேற்போம்!

செம்மொழிப் பெருமையும் உலகின் மூத்த நாகரிக சிறப்பையும் கொண்ட தமிழ் நிலத்திற்கு, சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி, தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது; 1957ல் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக நுழைந்தபோதே, இதுகுறித்துப் பேசி பதிவு செய்துள்ளது.

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தது, தமிழகத்தின் அழியாத தியாக வரலாறு.

அந்தத் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழ் நிலத்திற்கே உரித்தான பெருமைக்கு மகுடம் சூட்டும் முறையிலும், 1967ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் அதற்கான நடைமுறைகளை வகுத்தார்.

அதன் காரணமாக, 1967 ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில், சென்னை மாகாணத்தை "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உணர்ச்சிகரமான ஒருமித்த ஆதரவுடன், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டிய அறிஞர் அண்ணா அவர்கள், மூன்று முறை தமிழ்நாடு எனப் பேரவையில் தமது வெண்கலக் குரலில் எழுச்சி முரசம் கொட்ட, சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் "வாழ்க!" என முழக்கமிட்டது அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள சீர்மிகு வரலாறு. தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தை 1967 நவம்பர் 23ஆம் நாள் மத்திய அரசு ஏற்றதன் விளைவாக, இந்த மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் பெற்று விளங்குகிறது.

அந்தப் பெருமைக்குக் காரணமான பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில் ஆட்சியைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள், 1996-2001 ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டின் தலைநகருக்கு மெட்ராஸ் என்ற பெயரை மாற்றி சென்னை எனப் பெயர் சூட்டினார். அப்போது நான் சென்னை மேயராகப் பொறுப்பு வகித்த நாட்கள் பெருமையுடன் நினைவில் மலர்ந்து மணக்கின்றன.

மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்றும், தலைநகரத்திற்கு சென்னை என்றும் புகழ்ப்பெயர் சூட்டி, நாகரிக - பண்பாட்டு அடையாளத்தை – தமிழ் நிலத்தின் தன்னிகரற்ற பெருமையை நிலைநாட்டிய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.

அந்தப் பெருமையை தமிழர்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடுவதுடன், தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் மாநில அரசின் அனைத்து உரிமைகளும் மத்திய அரசிடம் அடகு வைக்கப்பட்டுள்ள அவமானகரமான நிலையில் -மிச்ச சொச்சமுள்ள உரிமைகளையும் மத்திய அரசு பறித்து வருகின்ற ஆபத்தான சூழலில், அந்த உரிமைகளை எப்பாடுபட்டேனும் பாதுகாக்கவும் மீட்கவும் தி.மு.கழகம் உறுதியேற்றுச் செயல்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 30ந் தேதி நடைபெறவுள்ள மாநில உரிமைகள் - தேச ஒற்றுமை மாநாட்டில் இந்திய அளவிலான தலைவர்கள் பங்கேற்புடன் மாநில உரிமைகளுக்கான குரலை துணைக்கண்டம் முழுதும் எதிரொலித்திடும் வண்ணம் ஓங்கி ஒலிப்போம்! உரிமைகளை மீட்டு, அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாட்டின் பெருமைகளைக் காப்போம்! தாய்க்குத் தனயன் பெயர் சூட்டிய தனிச் சரித்திரம் அல்லவா அது!" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News