சர்ச்சை கிளம்பியதும் உஷாரான இபிஎஸ் - நெல்லையில் வேட்பாளர் மாற்றம்... பின்னணி என்ன?

Tirunelveli AIADMK Candidate Changed: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   

Written by - Sudharsan G | Last Updated : Mar 23, 2024, 07:09 PM IST
  • சிம்லா முத்துச்சோழன் மீது பல விமர்சனங்கள் வந்தன.
  • அவர் திமுகவில் இருந்து சமீபத்தில் அதிமுகவில் இணைந்தவர்.
  • திருநெல்வேலியில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் போட்டியிடுகின்றன.
சர்ச்சை கிளம்பியதும் உஷாரான இபிஎஸ் - நெல்லையில் வேட்பாளர் மாற்றம்... பின்னணி என்ன? title=

Tirunelveli AIADMK Candidate Changed: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப். 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே வாக்குப்பதிவுக்கு உள்ளதால் அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளரை அறிவித்து பரப்புரையை  தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சி மட்டுமே இன்னும் அதன் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருக்கிறது எனலாம். இன்றிரவுக்குள் அந்த கட்சி காங்கிரஸில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்மாவட்டங்களை குறிவைக்கும் கட்சிகள்

மறுபுறம், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிவித்து, வேட்பாளர் அறிமுக கூட்டத்தை தொடங்கிவிட்டன. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் தங்களின் பரப்புரை சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டனர். மறுபுறம், அதிமுக மற்றும் பாஜகவும் தங்களது பரப்புரையை தொடங்கிவிட்டன. 

மேலும் படிக்க | திமுக அதிமுக இடையே போட்டி... அண்ணாமலை ஜெயிக்க மாட்டார் - எஸ். பி. வேலுமணி தடாலடி

இம்முறை திமுக - அதிமுக - பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் தென்மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதியை திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள நிலையில், பாஜக மற்றும் அதிமுக தென்மாவட்டங்களில் வெற்றிக்கனியை பறித்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கி உள்ளன. பாஜக கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனையும், திருநெல்வேலியில் தற்போதைய எம்எல்ஏ நயினார் நாகேந்திரனையும் களமிறக்கி உள்ளது.

திருநெல்வேலியில் அனல் பறக்கும் போட்டி

இதில் திருநெல்வேலி முக்கியமான ஒரு தொகுதியாகும். இதில் பாஜக பலமான வேட்பாளராக நயினார் நாகேந்திரனை களமிறக்கியிருந்தாலும், திமுக கூட்டணியில் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னர் சொன்னது போல் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் தனது பரபரப்புரையை வேகப்படுத்தி உள்ளார் எனலாம். காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. 

இது ஒருபுறம் இருக்க அதிமுக அங்கு நேரடியாக போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் சிம்லா முத்துச்சோழன் திருநெல்வேலியில் போட்டியிடுவார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டது. சிம்லா முத்துச்சோழன் என்பவர் கடந்த சில நாள்கள் முன்னர்தான் திமுகவில் தனக்கு தகுந்த வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டி, அதிமுகவில் இணைந்தவர். அந்த வகையில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்து வெறும் 15 நாள்களிலேயே அவருக்கு வாய்ப்பளிதத்து எப்படி என கட்சி வட்டாரத்திலேயே கேள்வி கிளம்பியது. 

யார் இந்த சிம்லா முத்துச்சோழன்?

அதுமட்டுமின்றி, 2016ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய பின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவர்தான் சிம்லா முத்துச்சோழன். அதில் ஜெயலலிதா 97 ஆயிரத்து 218 வாக்குகள் பெற்று வெற்றியடைந்த நிலையில், சிம்லா முத்துச்சோழன் 57 ஆயிரத்து 673 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மாற்றுக் கட்சியில் இருந்து வந்தது மட்டுமின்றி, அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட ஒருவருக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிப்பதா என்ற சர்ச்சை கிளம்பியது. குறிப்பாக, அதிமுக இம்முறை பிரபலமான வேட்பாளர்களை விட புதுமுகங்களுக்குதான் அதிக வாய்ப்பளித்திருக்கிறது என்றும் இது திமுக, பாஜகவுக்கே சாதகமாக முடியும் என்றும் பல குற்றச்சாட்டுகள் எடப்பாடி பழனிசாமி மீது வைக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், திருநெல்வேலி அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டதற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, அவருக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலும் படிக்க | தமிழகத்திற்கு மோடி 100 முறை வந்தாலும் பாஜக மண்ணை தான் கவ்வும் - திமுக

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News