தமிழ்நாடு நம்பர்-1 நிலையை அடைய வேண்டும்.! - மு.க.ஸ்டாலின்

‘எனது கனவுத் திட்டத்தை உங்களை நம்பித்தான் ஒப்படைக்கிறேன்’ என்று ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Written by - Nowshath | Edited by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 11, 2022, 12:47 PM IST
  • ’இனி பருவநிலை மாற்றத்துக்கு முக்கியத்துவம் அளியுங்கள் ’
  • ‘தமிழ்நாடும் ‘நம்பர்1’ என்ற நிலையை அடைய வேண்டும்
  • ’சட்டம் - ஒழுங்கு பிரச்சனையில் எந்த சமரசமும் வேண்டாம்’
தமிழ்நாடு நம்பர்-1 நிலையை அடைய வேண்டும்.! - மு.க.ஸ்டாலின் title=

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை புரிந்த தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், அனைவரையும் ஒருசேர இந்த மாநாட்டின் மூலமாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகிய நிலையில் இரண்டு கொரோனா அலைகளை எதிர்கொண்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம் என்று பாராட்டுத் தெரிவித்தார். குறிப்பாக, தடுப்பூசி செலுத்தும் பணியில் நீங்கள் அளித்த உழைப்பு மெச்சத்தக்கது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். 

மேலும் படிக்க |அடுத்தடுத்து வரும் அணைப் பிரச்சினைகள்: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவை, ‘வரலாறு காணாத கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டபோது, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தைச் சார்ந்தவர்களும் இரவு பகல் பாராது பணியாற்றியிருக்கிறீர்கள். இவற்றுக்கெல்லாம் மனதார பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 500க்கும் அதிகமான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு நாங்கள் வழங்கியிருக்கிறோம். அவற்றுள் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு இருக்கிறோம். 

‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ 

அதுமட்டுமல்லாமல், ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ என்ற ஏழு தொலைநோக்குக் குறிக்கோள்களை அறிவித்தோம். அவற்றுக்கான செயல்திட்டங்களையும் வகுத்து நிறைவேற்றி வருகிறோம். அந்தக் குறிக்கோள்களை அடைய மாநிலப் பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்தோம்; மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவை உருவாக்கினோம்; நிதி நுட்பக் கொள்கையை வகுத்தோம்; ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை உருவாக்கினோம்; தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையை வெளியிட்டோம்; வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தோம்; கொள்கை அரசையும் மக்கள் நல சேவை அரசையும் ஒருசேர நடத்த வேண்டுமென்ற இலட்சியத்தை வகுத்தோம். 

மேலும் படிக்க | இனி குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வீடுகள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! 

‘திராவிட மாடல்’

இந்தியாவுக்கே முன்னோடித் திட்டங்களாக விளங்கக்கூடிய ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ இப்படி மக்கள் நலனுக்காக நாம் தீட்டியுள்ள அனைத்துத் திட்டங்களும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடைய வேண்டும். இப்படி, இந்த ‘திராவிட மாடல்’ அரசின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு நிர்வாகச் சக்கரத்தைச் சரியான திசையில், மக்கள் பயனடைக்கூடிய திசையிலே திருப்பிய உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.! 

காலநிலை மாற்றம்

மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்குத்தான் இந்த ஒருங்கிணைந்த மாநாடு நடத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு ‘சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டைப் பசுமை நிறைந்த மாநிலமாக மாற்றுவதற்கு இதுவொரு மிக முக்கியமான முன்னெடுப்பு ஆகும். தற்போது நமது தமிழ்நாட்டில் 24 விழுக்காடாக இருக்கும் மொத்த பசுமைப் பரப்பினை குறைந்தபட்சம் 33 விழுக்காடாக 10 ஆண்டுகளுக்குள் உயர்த்திட வேண்டும். இந்த இலக்கை அடைய ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒரே திசையில் பயணிக்க வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சனை

தமிழ்நாட்டில் எப்போதும் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு விஷயத்திலே நான் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் படிக்க | முக அழகிரியை அரவணைத்த அமைச்சர்கள்... திருமணத்தில் இடம்பெற்ற பாசமழை காட்சிகள்..!

சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கையுடன் காவல்துறை செயல்படுகிறது. கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற பொதுமக்களை பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்குவதில் காவல்துறை எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது. 
நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க நாம் அனுமதித்துவிடக் கூடாது. எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்ற சமத்துவ சமூகமே – நமது அரசினுடைய குறிக்கோள்! 
சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. அவற்றைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். 

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’

தற்போது உருவாக்கப்பட்டுள்ள “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற துறையில் பெறப்படும் மனுக்களை ஆய்வு செய்து பொதுவான கோரிக்கைகள் மற்றும் தனிநபர் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் எனத் தரம்பிரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும். அதேபோல், பல தலைமுறைகளுக்குப் பயன்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எனது கனவுத் திட்டமாக இருக்கக்கூடிய ‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாணவர்களின் எதிர்கால நலனுக்காக  உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இந்த உயரத்தை அடைய யாரோ ஒருவர் தூண்டுதலாக வழிகாட்டியாக அமைந்திருப்பார்கள். அதேபோல் நீங்களும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு–இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக ஊக்கப்படுத்துங்கள்.

‘நம்பர்-1’ தமிழ்நாடு

தமிழ்நாடு ‘நம்பர்1’ என்ற நிலையை அடைய வேண்டும். எனது கனவுத் திட்டத்தை உங்களை நம்பித்தான் ஒப்படைக்கிறேன். நமது அரசின் சார்பில் தீட்டப்படக்கூடிய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் வெற்றி என்பது உங்களைப் போன்ற மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமேயில்லை. எனவே, நீங்கள் அனைவரும் நேர்மையாக, ஒளிவுமறைவற்ற, வெளிப்படைத்தன்மையோடு, முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும். அப்படி செயல்படும் உங்களுக்கு இந்த அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்பதை நான் இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆட்சியர்கள், காவல்துறையினர், வனத்துறையினர் தங்களது தரப்பு விளக்கத்தை முதலமைச்சரிடம் எடுத்துக்கூறினர். மாவட்ட வாரியாக விளக்கம் கேட்கப்பட்டு வருவதால் மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது.  ஆட்சியர்கள் மாநாடு முடிவடைந்த பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாரந்தோறும் சட்ட ஒழுங்கு நுண்ணறிவு பிரிவு ஆலோசனைக் கூட்டங்களை தவறாமல் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் டேஷ்போர்டு  உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த ஆட்சியின் மதிப்பீடு என்பது சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதில்தான் உள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

மேலும் படிக்க | இன்று முதல் உயரும் சரக்கு விலை; ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News