அதிகாலையில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தீபாவளி அன்று கூடுதல் நேரம் மற்றும் அதிகாலையில் பட்டாசு வெடிக்க அனுமதிகோரி மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2018, 06:33 AM IST
அதிகாலையில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை title=

சுற்றுசூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்க்கு தடை செய்யவேண்டும் எனக்கூறி சுற்றுசூழல் ஆர்வலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. 

இந்த வழக்கு கடந்த 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு நாடு தீர்ப்பு வழங்கியது. அதில், நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்க மற்றும் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்க முடியாது. பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சத்திற்கும் அதிகமாக குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்கவோ, தயாரிக்கவோ தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது உச்ச நீதிமன்றம். அதில் குறிப்பாக தீபாவளி அன்று இந்தியா முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களில் நள்ளிரவு 11.45 முதல் 12.30 வரை முக்கால் மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று தமிழக சார்பில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டாசு வெடிப்பதற்க்கான இரவு 8 மணி முதல் 10 மணி வரை இருக்கும் நேரத்தை, காலை அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரை மாற்ற வேண்டும். தமிழகத்தில் தீபாவளி அதிகாலையில் கொண்டாடுவது வழக்கம். வடமாநிலங்களில் தீபாவளி இரவில் கொண்டாடப்படுகிறது. எனவே அதிகாலையில் பட்டாசு வெடித்து கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கை வசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.

Trending News