ஜெ., காட்டிய வழியில் அனைவரும் செல்ல வேண்டும்- சசிகலா பேச்சு

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் பரப்பரப்பான பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்திருந்தார். 

Last Updated : Feb 8, 2017, 04:28 PM IST
ஜெ., காட்டிய வழியில் அனைவரும் செல்ல வேண்டும்- சசிகலா பேச்சு title=

சென்னை: தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் பரப்பரப்பான பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்திருந்தார். 

காலை 11.40 மணியளவில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 11.40 மணிக்குதான் கூட்டம் தொடங்கியது.

அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் 131 அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்ததைத் தொடர்ந்து, அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. 

இந்த கூடத்தில் சசிகலா பேசியதாவது:-

ஜெயலலிதா மறைந்த போது, இந்த கழக குடும்பத்தில் கலகம் வராதா என்று, கண்ணி வைத்து காத்திருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை. அம்மா கட்டிக்காத்த குடும்பத்தில் அன்புதான் மேலோங்கி நின்றது, கட்டுப்பாடுதான் ஓங்கி நின்றது.

திமுக-வின் சதித் திட்டத்திற்கு பலர் துணை போனார்கள் பலர் புழுதி வாரித் தூற்றினார்கள். இப்போது ஒருவர், அம்மா அவர்களின் மறைவின் போது நான் எடுத்த முடிவு, அவர் முதல்வராக தொடர வேண்டும் என்று. அப்போது பலரும் ஓ. பன்னீர்செல்வம் உட்பட, என்னை பொறுப்பேற்கச் சொல்லி நிர்பந்தம் செய்தார்கள். அப்போது எதையும் ஏற்கும் மனநிலையில் நான் இல்லை.

அதிமுக அன்று பிளவுபட்ட நிலையில், மாற்று அணியில் இருந்து அவர் செய்த செயல்களை எல்லாம் கருணை உள்ளத்தோடு மன்னித்துதான் நம் ஜெயலலிதா அவருக்கு வாய்ப்பு வழங்கினார்கள்.

பலமுறை அந்த வாய்ப்பைப் பெற்றார். அந்த வழியில் தான் நானும் செயல்பட்டேன். ஆனால், அதன் பின்னால் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் நான் உற்று நோக்கிய நிலையில், சட்டமன்ற நிகழ்வுகளில் ஜெயலலிதாவை அழிக்கத் துடித்த திமுக-வுடன் கழகத்திற்கு கேட்டையும், நாசத்தையும் விளைவித்த திமுக-வுடனான அவரின் செயல்கள், ஜெயலலிதா எதற்காக போராடினாரோ, கடைக்கோடித் தொண்டர்கள் எதற்காகப் போராடினார்களோ அதனை ஈடேற்றும் விதத்தில் அமைந்திடவில்லை.

ஜெயலலிதா இல்லாத இந்த நேரத்தில், முதலமைச்சர் பதவியில் அமர்ந்து விட்டதால், அவர் வகுத்த பாதையில் இருந்து விலகிட முடியாது. 

ஜெயலலிதாவின் கனவுதான் நம் பார்வை. நான் அன்றே சொன்னேன், ஜெயலலிதாவின் வழியில் தான் நம் பாதை. அவர் காட்டிய பாதையில்தான் நமது பயணம் என்பதைச் சொன்னேன். இதைத் தாண்டி யார் நடந்தாலும், நடித்தாலும் அந்த நடையை அதிமுக கண்டுபிடித்துவிடும்.

இத்தனை நாட்கள் வராத எதிர்ப்பு, நம் எதிரிகளிடமிருந்து புறப்படுகிறது என்றால் என்ன அர்த்தம். நம் எதிரிகள் விரும்பாதது இங்கு நடக்கிறது. அதனால் தான் இந்த சலசலப்பு. இதற்கெல்லாம் அதிமுக அஞ்சாது.

அம்மாவின் கனவுகளும், அவர் இதயத்தில் தாங்கிய கனலும் என்றும் நம்மிடம் இருக்க வேண்டும். அவை நிறைவேற்றப்பட வேண்டும். எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது. 

கடந்த 5-ம் தேதி நடந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் என்பது ரகசியக் கூட்டமல்ல. அது பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்த செய்திதான். அது, கடைசி நேரத்தில் தான் தனக்கு தெரிய வந்தது என்பது போன்ற ஓ. பன்னீர்செல்வத்தின் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள். 

கட்டாயப்படுத்தினார்கள் என்கிறார், என்னை சட்டமன்ற குழு தலைவராக முன்மொழிந்தவர், என் அருகில் அமர்ந்து உரையாடிக் கொண்டுதான் இருந்தார். 48 மணி நேரம் கழித்து ஒரு பொய்யை சொல்கிறார் என்றால், அந்த இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? யார் யாருடன் ஆலோசித்தார். 

ஓ. பன்னீர்செல்வம் கருத்துக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கினேன். ஆனால், சட்டமன்றத்தில், திமுக மற்றும் முதல்வர் ஆகியோருக்கு இடையேயான வார்த்தை பரிமாற்றங்களில் இருந்த உள் அர்த்தம் எனக்குப் புரியாமல் இல்லை. அது, அடுத்த கட்டத்தை நோக்கி செல்லாமல் தடுப்பது தான் பொதுச் செயலாளர் ஆன என்னுடைய கடமை. குழப்பத்தை ஏற்படுத்த திமுக எடுத்த முயற்சி இது என்பதை நேற்று பேட்டி கொடுத்த ஸ்டாலினின் அளவு கடந்த மகிழ்ச்சி, அதை உண்மை ஆக்கிவிட்டது.

துரோகங்கள் ஒரு போதும் வென்றது கிடையாது. அதுவும் அதிமுக என்றும் வெல்லவே முடியாது. இத்தனை காலம் ஜெயலலிதாவிற்காக வாழ்ந்தேன். இனி, அவரது கனவுகளுக்காக வாழ்வேன். அதே முடிவைத் தான் நீங்களும் எடுத்துள்ளீர்கள். இந்த லட்சியப் பயணத்தில் என்னோடு பயணிக்கும் ஜெயலலிதாவின் பிள்ளைகளாகிய உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

நம் எதிரிகள், அவர்களின் சுயரூபத்தைக் காட்டுகிறார்கள். நாம் யார் என்று அவர்களுக்கு நிரூபித்துக் காட்டுவோம். நம்மை பிரிக்கும் சக்தி; நம்மைக் பிரிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை. மக்கள் மத்தியில் எழுப்பப்படும் குழப்பங்களை உரிய நேரத்தில் நான் தீர்த்து வைப்பேன்.

அதிமுகவின் விரோதிகள் வரிந்துகட்டி வருகிறார்கள்; துரோகத்தின் வடிவத்திலும் வருகிறார்கள். கழகம் அதற்கு அஞ்சாது. நம் புரட்சித்தலைவர் அவர்கள் சொன்னது போல, அச்சம் என்பது மடமை, அஞ்சாமை திராவிடர் உடமை, ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, நம் தாய் கட்டிக் காத்த கழகத்தைப் பாதுகாப்பது நமது கடமை.

துரோகமும் - விரோதமும் கைகோர்த்து வந்தாலும் அவை தோற்று ஓடும், தோற்க வைப்போம் என்று பேசினார்.

Trending News