குடியரசு தின விழா: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் கட்சிகள்

Governor RN Ravi Tea Party Controversy: 2024 குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 24, 2024, 11:57 AM IST
குடியரசு தின விழா: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் கட்சிகள் title=

What Is The Controversy Surrounding Governor RN Ravi's Tea Party: வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடாப்படுகிறது.  குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார். குடியரசு தின விழா தேநீர் விருந்தில் பங்கேற்கும் படி தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார் எனக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என அறிவித்துள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே, அவர் மாநிலத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் எண்ணத்துடனே இருந்துவருகிறார். அவரை மாற்ற வேண்டுமென தமிழக கட்சிகள் கோரிக்கை விடுக்கும் அளவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் இருக்கிறது. அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மேடையில் பேசும் போது, பா.ஜ.வின் பார்வையிலான வரலாற்றை அவர் பேசுவதும் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

மேலும் படிக்க - காந்தி இல்லை.. நேதாஜியே சுதந்திரத்திற்கு காரணம்.. ஆளுநர் ரவி சர்ச்சை

ஆளுநர், அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய காலம் நெருங்கி வருகிறது. உண்மையான வரலாற்றை ஆளுநர் படிக்க வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். 

இவற்றையெல்லாம் கண்டிக்கும் விதமாக (26.01.2024) அவர் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கிறோம் என தமிழக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. 

நேற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 127 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி,  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துக் கொண்டு பேசும் போது, "ஆங்கிலேயர் சென்ற பின்னர் நீண்ட காலம் நம் பாரம்பரியத்தை பண்பாட்டை ஆன்மீக சிறப்பை மறந்தோம். சுதந்திர போராட்ட வீரர்களை நாம் மறந்தோம். குழப்பத்திற்கு ஆளானோம். நேதாஜி ராணுவத்தில் ஏராளமான தமிழர்கள் பணியாற்றி உள்ளனர். தமிழகத்தில் இருந்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் உரிய அங்கீகாரத்தை பெறவில்லை. நேதாஜி இல்லையென்றால் 1947 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. 1942 ஆம் ஆண்டுக்கு பின்னர் காந்தியின், சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை" எனக் கூறியிருந்தார். 

மகாத்மா காந்தியால் சுதந்திரம் கிடைக்கவில்லை, நேதாஜியால் தான் சுதந்திரம் கிடத்தது எனக்கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும் படிக்க - நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அவர் கூறியது, 

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு வரலாற்றுத் திரிபு வாதங்களை செய்வதோடு, தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் கலாச்சாரத்தை  சிறுமைப்படுத்துகிற வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 127-வது பிறந்தநாள் விழாவை ஆளுநர் மாளிகையில் கொண்டாடுகிற போர்வையில் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர்களையே கொச்சைப்படுத்துகிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார். 

அதில் அவர் பேசும் போது, ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம் என்று காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற வகையில் காழ்ப்புணர்ச்சியோடு கருத்துகளை கூறிய இவரை இந்திய விடுதலைப் போராட்ட தேசபக்தர்களின் ஆன்மா மன்னிக்காது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை 1885 இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. தென்னாப்பிரிக்க கருப்பு இன மக்களின் விடுதலைக்காக போராடி வரலாறு படைத்த மகாத்மா காந்தி 1915 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க  முன்வந்த போது, அவரது தலைமையை நாடு ஏற்றுக் கொண்டது. அவரது வழிகாட்டுதலின்படி அகிம்சை வழியில் சத்தியத்தை கடைபிடித்து ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் போன்ற போராட்ட வழிமுறைகளின் மூலம் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களை திரட்டியதில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை ஆயிரம் ஆர்.என். ரவிக்கள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது.

மேலும் படிக்க - ஆளுநருக்கு கட்டுப்பட்டு நடக்க முதல்வர் ஒன்றும் பொம்மை இல்லை!

மகாத்மா காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1938 இல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளமை துடிப்புடன் செயல்பட்டு வந்த சுபாஷ் சந்திர போசை தலைவராக நியமிக்க பரிந்துரை செய்தவர் காந்தியடிகள். அதேபோல, 1939 இல் திரிபுரியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறியதோடு, இந்தியாவை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை ஏற்றுக் கொண்டார். 

இதைத் தொடர்ந்து பிரிட்டீசாரின் பகை நாடுகளின் தலைவர்களான ஹிட்லரையும், முசோலினியையும் சந்தித்து அவர்களது ஆதரவை பெற்று, ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்போடு இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அணுகுமுறை பலன் தரும் என்று அவர் நம்பினார். 

பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போர் தொடங்கிய போது சிங்கப்பூர் வானொலியில் மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோருகிற வகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசும் போது, ‘தேசப்பிதாவே எங்களை வாழ்த்துங்கள், இன்ப துன்பங்களிலும், வெற்றி தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன். இந்தியா விடுதலை அடைவதற்கு எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மனமுவந்து அளிப்போம்” என்று அவர் பேசிய உணர்ச்சிமிகு உரை, இந்தியா எங்கும் எதிரொலித்தது. 

அப்போது அவர்கள் பயன்படுத்திய கொடி என்பது காங்கிரஸ் மகாசபை ஏற்றுக் கொண்ட கைராட்டை சின்னம் பொறித்த மூவர்ண கொடி தான் என்பதை அரைவேக்காடு ஆர்.என். ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

மேலும் படிக்க - ஆளுநருக்கு வேலையில்லை அதனால் அடிக்கடி டெல்லி செல்கிறார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுபாஷ் சந்திரபோஸ் தொடுத்த போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இரண்டாவது உலகப் போரில் சுபாஷ் சந்திரபோசை ஆதரித்த நாடுகள் தோல்வியடைகிற நிலை ஏற்பட்ட போது, இவரது முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள். 

150 ஆண்டு கால பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சையில் வழியில் போராடித் தான் வெற்றி பெற முடியும் என்ற மகாத்மா காந்தியின் அணுகுமுறை மூலமாகத் தான் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு வகிக்காமல், ஒரு துரும்பை கூட போடாமல் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்., இந்துமகாசபை வழிவந்த பாரதிய ஜனதா கட்சியினர். 

சுதந்திரம் பெற்று ஆகஸ்ட் 15, 1947 மற்றும் ஜனவரி 27, 1950-க்கு பிறகு ஜனவரி 26, 2022 வரை 52 ஆண்டுகள் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்த தேசபக்தியே இல்லாத ஒரு பாசிச இயக்கம் தான் பா.ஜ.க. என்ற கரைபடிந்த வரலாறை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது. இதன்மூலம் ஆர்.என். ரவி போன்றவர்கள் செய்கிற வரலாற்று புரட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க - கோயிலுக்கு செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு - தமிழக காங்கிரஸ் போராட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News