லண்டனில் பென்னி குயிக் கல்லறையை புதுப்பிக்க வேண்டும் -வைகோ

லண்டனில் பென்னி குயிக் கல்லறையைப் புதுப்பிக்கவும், சிலை நிறுவிடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

Last Updated : Jan 19, 2018, 05:11 PM IST
லண்டனில் பென்னி குயிக் கல்லறையை புதுப்பிக்க வேண்டும் -வைகோ title=

லண்டனில் பென்னி குயிக் கல்லறையைப் புதுப்பிக்கவும், சிலை நிறுவிடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

அதைக்குறித்து மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

லண்டன் ஃபிரிம்லேயில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தின் செயலர் சூஃபெரோ, மினிஸ்டர் சாரோன் பில்லிங் ஆகிய இருவரும் இன்று தாயகத்திற்கு வருகை தந்து, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தனர்.  இருவருக்கும் பொன்னாடைகள் அணிவித்து,  மலர் மாலைகள், பூங்கொத்துகளை வழங்கி வைகோ வரவேற்றார்.. 

செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில்தான், முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் பென்னி குயிக் அவர்களுடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. இங்கிலாந்து நாட்டு வழக்கப்படி, 100 ஆண்டுகள் கடந்து விட்டால், அந்தக் கல்லறை அகற்றப்பட்டு, அந்த இடம் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டு விடும். அதன்படி, பென்னி குயிக் அவர்களுடைய கல்லறை அகற்றப்பட இருக்கின்றது என்ற செய்தியை அறிந்து, உத்தமபாளையத்தைச் சேர்ந்த சந்தன பீர் ஒலி, பென்னி குயிக் கல்லறையை அகற்றுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 

அதற்கு, பென்னி குயிக் செய்த சாதனை, அதற்காக அவரைத் தமிழகத்து மக்கள் எந்த அளவிற்குப் போற்றிப் புகழ்கின்றார்கள் என்பதற்கான சான்று ஆவணங்களைத் தர வேண்டும். எனவே, அந்தத் தேவாலயத்தைச் சேர்ந்த மேற்கண்ட இரண்டு நிர்வாகிகளும் தமிழகத்திற்கு வந்தனர். அவர்களை மதுரை வானூர்தி நிலையத்தில் வைகோ அவர்கள் வரவேற்றார்கள்.

இருவரும், முல்லைப்பெரியாறு பாசனப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தனர். பொங்கல் திருநாளின் போது, முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் பென்னி குயிக் அவர்களுக்குச் செய்கின்ற சிறப்புகளை நேரில் பார்த்தனர். 

இதுகுறித்துத் தங்கள் தேவாலய நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பென்னி குயிக் கல்லறையை அகற்றுவது இல்லை என அவர்கள் உடனடியாக முடிவு எடுத்து, அதற்கான கடிதத்தைத் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு மின் அஞ்சல் வழியாக அனுப்பி உள்ளனர். 

தமிழகத்திற்கு வருவதற்கு முன்பே, தமிழக ஊடகங்களின் வாயிலாக, முல்லைப்பெரியாறு போராட்டக் களங்களையும், அணையைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களையும், அவர்களின் காணொளிகளில் பார்த்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க வைகோ அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள், தொடர் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தாயகம் வந்தனர். வைகோ அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தனர். செய்தியாளர்கள் முன்னிலையில், நன்றி தெரிவித்துக் கொண்டனர். அவர்களது வருகைக்கு வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார். 

அத்துடன், கலைஞர் முதல்வராக இருந்தபோது, மதுரை பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் பென்னி குயிக் அவர்களுக்குச் சிலை அமைத்தார்; ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது, பென்னி குயிக் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டி, அவரது சிலையை நிறுவினார். தேனி பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்டினார். 

எனவே, லண்டன் ஃபிரிம்லேயில் உள்ள பென்னி குயிக் கல்லறையைப் புதுப்பிப்பதற்கும், அங்கே அவருக்கு ஒரு சிலை அமைப்பதற்கும், தேனி பேருந்து நிலையம் முன்பும் ஒரு சிலை நிறுவிடவும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, செய்தியாளர்கள் மூலமாக வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

Trending News