ஹாசினி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி- ஓபிஎஸ்

Last Updated : Feb 13, 2017, 06:06 PM IST
ஹாசினி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி- ஓபிஎஸ் title=

சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இன்று தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஹாசினிக்கு நடந்த கொடுமை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார். 

பின்பு ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மாதா நகர் 10_வது தெருவில் வசித்து வரும் பாபு என்பவரின் மகள் சிறுமி ஹாசினி என்பவரின் சடலம் 8.2.2017 அன்று அனகாபுத்தூர் அருகே காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்ததில், அச்சிறுமி உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். 

இச்சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறுமி ஹாசினியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மாங்காடு போலீசில் புகார் செய்தனர். அடுக்கு மாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் என்பவன் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தஷ்வந்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

 

 

Trending News