சூர்யாவுக்கு எதிராக வன்முறை பேச்சு - பாமக மாவட்ட செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு

நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க செயலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 17, 2021, 01:34 PM IST
சூர்யாவுக்கு எதிராக வன்முறை பேச்சு - பாமக மாவட்ட செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு title=

சென்னை: பாமக மாவட்ட செயலாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதாவது நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு அளிக்கப்படும் என அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 14-ஆம் தேதி மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த மயிலாடுதுறை மாவட்ட  பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த  நடிகர் சூர்யாவை காலால் எட்டி உதைக்கும் இளைஞர்களுக்கு  ஒரு லட்சம் பரிசு என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இனி நடிகர் சூர்யா நடித்த படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் வன்முறை தூண்டும் விதமாக பேசியிருந்தார். 

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி மீது  மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ |  ஜெய் பீம் படத்தால் அடுத்த சிக்கலில் சூர்யா; 5 கோடி நஷ்ட ஈடு

முன்னதகா பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் எடுத்துக்கூறும் படமாக வெளிவந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த "ஜெய்பீம்" (Jai Bhim) படத்தின் சில காட்சிகள் சர்ச்சையை எழுப்பியது. அதாவது இந்த படத்தில் வில்லனாக காட்டப்பட்டுள்ள போலீஸ் கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயர் அந்தோணி சாமி என்பதை வைக்காமல், மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. அதேபோல் குற்றவாளி கதாபாத்திரத்தின்  பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தததை தொடர்ந்து, படத்தில் இருந்த அந்த "காலண்டர் காட்சி" திருத்தம் செய்யப்பட்டது.

னால் இந்த விமர்சனங்களை அடுத்து, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss), சூர்யாவை நோக்கி பல கேள்வி எழுப்பி கடிதம் ஒன்றை தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட விவகாரம் சூடுப்பிடிக்கத் தொடங்கியது. அன்புமணியின் அறிக்கையைஅடுத்து நடிகர் சூர்யாவும் விரிவான பதில் அளித்திருந்தார். இந்த விவாகரத்துக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது என அனைவரும் நினைத்திருந்த நிலையில், வன்னியர் சங்கம் சார்பில் ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ALSO READ |  நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய அசுரன்

அதாவது ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக  தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் (T. J. Gnanavel) மற்றும் படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் (Amazon Prime Video) ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அப்படி கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேச்சு பொருளாக மாறியது. பலர் நடிகர் சூரியாவுக்கு (Actor Suriya) ஆதரவாக #WeStandWithSuriya என்ற ஹேஸ்டேக் மூலம் ஆதரவு தெரிவிக்க, அது ட்ரெண்டிங் ஆனது.  மேலும் நாளுக்கு நாள் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், திரைத்துறைச் சார்ந்த பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவுக்கு (Actor Suriya) ஆதரவாக தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க செயலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  சூர்யாவை விமர்சித்த அன்புமணிக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News