திமுகவின் வெற்றி பார்முலா... திருமா ஓகே சொல்ல என்ன காரணம்? - முழு விவரம் இதோ!

DMK INDIA Alliance: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 8, 2024, 03:55 PM IST
  • திமுக இதுவரை மொத்தம் 9 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளது.
  • இன்னும் 30 தொகுதிகள் மீதம் உள்ளன.
  • காங்கிரஸ், மநீம ஆகியவை பேச்சுவார்த்தையில் இருக்கின்றன.
திமுகவின் வெற்றி பார்முலா... திருமா ஓகே சொல்ல என்ன காரணம்? - முழு விவரம் இதோ! title=

DMK INDIA Alliance: மக்களவை பொதுத்தேர்தல் (Lok Sabha Election 2024) வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில, அதற்கான தேதி மற்றும் அட்டவணை இன்னும் கூடிய விரைவில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் என தெரிகிறது. கடந்த இரண்டு தேர்தல்களையும் வென்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக முதற்கட்டமாக 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் இப்போதே பரப்புரை பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். 

பாஜக ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக அது இடம்பெற்றுள்ள INDIA கூட்டணிக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உள்ளது. 

ஓகே சொன்ன மதிமுக, விசிக

முதற்கட்டமாக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியை திமுக ஒதுக்கியது. மேலும், ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, சிபிஎம், சிஐபி கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை திமுக வழங்கியது

மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமி ஓட்டுக்காக ஆள் வைத்து கொலை செய்தவர் - கோவை செல்வராஜ்

இருப்பினும் அவை எந்தெந்த தொகுதிகள் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அந்த வகையில், காங்கிரஸ், மதிமுக, விசிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு மீதம் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், மதிமுக, விசிக கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இன்று நிறைவடைந்தது. 

வைகோ உறுதி

மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, மாநிலங்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால் தற்போது அதுகுறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வைகோ கூறினார். மதிமுக 2 தொகுதிகளை கேட்டது குறிப்பிடத்தக்கது. 

அதை தொடர்ந்து, விசிகவுக்கு 2 தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில்,"விழுப்புரம் தனி தொகுதி, சிதம்பரம் தனி தொகுதி என விசிக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் என்ன பகிர்வு முறை கையாளப்பட்டதோ, அதே பகிர்வு முறை தற்போதும் கையாளப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் மூன்று தனித் தொகுதி ஒரு பொது தொகுதி வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.

கடந்த தேர்தலை போல...

பின்னர் இரண்டு தனி தொகுதி ஒரு பொது தொகுதி வேண்டும் என வலியுறுத்தினோம். தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு கடந்த தேர்தலில் இந்த கூட்டணி எவ்வளவு கட்டுக்கோப்பாக இருந்து ஒட்டு மொத்த கட்சிகளும் வரவேண்டும் என்கின்றதன் அடிப்படையில் விரிவான கலந்தாய்வுக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த தேர்தலின் போது கையாளப்பட்ட அதே பகிர்வு முறைக்கு உடன்பாடு தெரிவித்து கையெழுத்து ஒப்பந்தம் ஆகி இருக்கிறது.

தனி சின்னம் பானை சின்னத்தில் போட்டியிடுவது என்பதை ஏற்கனவே உறுதி செய்திருக்கிறோம். திமுக தொகுதியை கொடுத்தது வாங்கிக் கொண்டும் என்பதை விட அனைவரும் சேர்ந்து தொகுதியை பங்கிட்டு கொண்டோம்" என்றார். 

திமுகவின் பிளான் என்ன?

எனவே, திமுக கூட்டணியில் இதுவரை 9 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீதம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதி வரையும், உதயசூரியன் சின்னத்தில் மநீமவுக்கு ஒரு தொகுதியும் கொடுக்கப்போடும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

கொமதேக ஏற்கெனவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. எனவே, திமுக 21+2 என உதயசூரியன் சின்னத்தில் 23 வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்புள்ளது. திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் கடைசி கட்டத்திற்கு வந்துவிட்ட நிலையில், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் முகாம்கள் இன்னும் முதல் படியிலேயே நிற்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலினை ஏமாற்றிய அதிகாரிகள்? அமைச்சருக்கே இந்த நிலைமையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News