வன்னியர் போல் ஆதிதிராவிடர்களுக்கும் உள் ஒதுக்கீடு? திமுகவை கேள்வி கேட்கும் விசிக - என்ன பிரச்னை?

Tamil Nadu Reservation: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவது போல், பறையர் - ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 6, 2024, 05:12 PM IST
  • இதனால், அரசியல் களத்தில் பெரும் விவாதம் தொடங்கியிருக்கிறது.
  • ஆதிதிராவிடர் மக்கள் தொகை 1 கோடியை நெருங்குகிறது.
  • ஆதிதிராவிடரும் ஏன் வன்னியர் போல் உள் ஒதுக்கீடு கேட்கக் கூடாது - ரவிக்குமார்
வன்னியர் போல் ஆதிதிராவிடர்களுக்கும் உள் ஒதுக்கீடு? திமுகவை கேள்வி கேட்கும் விசிக - என்ன பிரச்னை? title=

Tamil Nadu Caste Based Reservation: தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மொத்தம் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பட்டியல் பிரிவினருக்கு 18 சதவீதமும் (SC), பட்டியல் பழங்குடியின பிரிவினருக்கு 1 சதவீதமும் வழங்கப்படுகிறது. இதில் SC பிரிவில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் என்பது உள் ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. 

பிறப்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு (BC) 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதில் BC - பொதுப் பிரிவுக்கு 26.5 சதவீதமும், BC - இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதமும் வழங்கப்படுகிறது. அதில் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு (MBC) 20 சதவீதம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 31 சதவீதம் என்பது பொது பிரிவினருக்காகும்.

அதிமுகவின் அவசர சட்டம்

இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 2021ஆம் ஆண்டு பிப்.26ஆம் தேதி அன்று மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி, அதனை அவசர சட்டமாக நிறைவேற்றியது. இதுதொடர்பாக அரசாணையும் வெளியானது.  

இந்த அவசர சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு வகுப்புக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்திருந்தது.

மேலும் படிக்க | பட்டியல், பழங்குடியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை - உச்சநீதிமன்றம்

சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்த அவசர சட்டத்தை எதிர்த்து பல்வேறு மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு சமூகத்துக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றும் எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றமும் இந்த தீர்ப்பை ரத்து செய்ய மறுத்துவிட்டதால் 10.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. 

எனவே, வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடத்த சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றன. இருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்றும் பீகார் போன்று மாநில அரசு நடத்தும்பட்சத்தில் அதனை நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியும் எனவும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வருகிறது. 

அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு செல்லும் என சில நாள்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அது வன்னியர் உள் ஒதுக்கீட்டில் பொருத்திப் பார்க்க முடியாது எனவும் கூறப்படுகிறது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்று மட்டுமே வழியாக இருக்கும்.

ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்கள்

அதேபோல், சமீபத்தில் ஆர்டிஐ மூலம் தமிழ்நாடு அரசு தெரிவித்த தகவல் ஒன்றின்படி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் MBC பிரிவிலேயே வன்னியர்கள்தான் அதிக இடங்களை பெறுகிறார்கள் என்பதும் சராசரியாக அது அவர்களின் 10.5 சதவீத அளவை மிஞ்சுகிறது என்பதும் உறுதியானது. இப்படியிருக்க, வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்து பலத்த கேள்விகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில், பறையர் - ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளது இந்த விவகாரத்தில் மேலும் தீவிரமாக்கியிருக்கிறது எனலாம்.

பறையர்- ஆதிதிராவிடர்களுக்கும் உள் ஒதுக்கீடு?

இதுகுறித்து அவர் வெளியிட்ட X பதிவில்,"2011 சென்சஸ் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில்  அருந்ததியர் மக்கள் தொகை - 21 லட்சத்து 50 ஆயிரத்து 285; தேவேந்திரகுல வேளாளர் மக்கள் தொகை - 24 லட்சத்து 65 ஆயிரத்து 96; பறையர்- ஆதிதிராவிடர் மக்கள் தொகை - 91 லட்சத்து 73 ஆயிரத்து 139; கிறித்தவர்களில் உள்ள பறையர் - ஆதிதிராவிடரை இத்துடன் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தரவுகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில் ஓய்வுபெற்ற அதிகாரி கிறித்துதாஸ் காந்தி தயாரித்தது எனவும் அவர் கூறியுள்ளார். 

மேலும் அந்த பதிவில்,"சற்றேறக்குறைய பறையர் - ஆதிதிராவிடர் அளவு மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமூகத்தினர் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் பெற்றுள்ள இடத்தோடு ஒப்பிடும்போது பறையர்- ஆதிதிராவிடர் பெற்றுள்ள இடம் மிக மிகக் குறைவு என்பதை எவரும் ஒப்புக்கொள்வார்கள். 

தமிழ்நாடு அரசு ஆர்டிஐ விண்ணப்பம் ஒன்றுக்கு வழங்கியுள்ள தகவலில் வேலை வாய்ப்பிலும், மருத்துவப் படிப்பிலும் வன்னியர் சமூகத்தினர் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கையைக் கொடுத்துள்ளது. அவர்கள் கேட்கும் 10.5% இட ஒதுக்கீட்டைவிடக் கூடுதலாக அவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுகிறார்கள் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அவ்வாறிருந்தும் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு மறுக்கவில்லை. 

ரவிக்குமார் எழுப்பும் கேள்விகள்

வன்னியர் சமூகத்தினருக்குத் தமிழ்நாடு அரசு உள் ஒதுக்கீடு கொடுத்ததற்குப் பிறகு வன்னியர்களைவிடப் பொருளாதாரத்திலும், சமூக நிலையிலும், அரசியல் அதிகாரத்திலும் மிகவும் பின் தங்கியிருக்கிற பறையர் - ஆதிதிராவிடரும் ஏன் அதுபோல உள் ஒதுக்கீடு கேட்கக்கூடாது? என்ற கேள்வி பறையர் - ஆதிதிராவிடர் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

தனிப்பட்ட உரையாடல்களில் அதை அவர்கள் வெளிப்படுத்தினாலும் தமிழ்நாடு அரசை நோக்கி அதை ஒரு கோரிக்கையாக இன்னும் முன்வைக்கவில்லை. அப்படி முன்வைத்தால் வன்னியர் உள் ஒதுக்கீடுக்காக முதலில் சட்டம் இயற்றிய அதிமுக அதை ஆதரிக்குமா?, 10.5% சட்டத்தை ஆதரிக்கும் தற்போதைய திமுக அரசு அதுபோல பறையர் - ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுமா?,  தமிழ்நாடு அரசு அவ்வாறு சட்டம் இயற்றினால் இப்போது 10.5% சட்டத்தை ஆதரிக்கும் நடுநிலையாளர்களும் மற்ற அரசியல் கட்சிகளும் அதை ஆதரிப்பார்களா?" என கேள்வி எழுப்பி உள்ளார். இது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. 

மேலும் படிக்க | கிசுகிசு : சீனியர்கள் அப்செட், முதன்மையானவரிடம் ரிப்போர்ட் - தள்ளிப்போன வாரிசுவின் பட்டாபிஷேகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News