இந்தியா vs நியூசிலாந்து: 2வது ஒருநாள் போட்டி; தொடருமா வெற்றி? ஒரு அலசல்

இந்தியா - நியூசிலாந்து இரு அணிகளுக்கிடையில் நடைபெறும் 2_வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யி மைதானத்தில் நடைபெற உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2019, 09:39 AM IST
இந்தியா vs நியூசிலாந்து: 2வது ஒருநாள் போட்டி; தொடருமா வெற்றி? ஒரு அலசல் title=

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணி, அந்நாட்டு எதிராக ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டியில் பங்கேற்று வருகிறது. 

கடந்த 23 ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்து இடையே முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

ஆரம்பம் முதலே பந்துவீச்சில் அதிரடி காட்டிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து நியூசிலாந்து வீரர்களை வெளியேற்றினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய குப்டில் 5(9), முன்றோ 8(9) ரன்களில் வெளியேற தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 64(81) ரன்கள் குவித்தார். எனினும் இவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி ஆட்டத்தின் 38-வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட், மொகமது ஷமி 3 விக்கெட், யுவேந்திர சாஹல் 2, கேதர் ஜாதவ் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா 11(24) ரங்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் ஷிகர் தவானுடன் இணைந்து இந்திய கேப்டன் விராட் கோலி இருவரும் நிதானமாக வெற்றியை நோக்கி இந்திய அணியை அழைத்து சென்றனர். இதற்கிடையில் ஷிகர் தவான் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய கேப்டன் விராட் கோலி 45(59) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் அம்பத்தி ராயுடு மற்றும் ஷிகர் தவான் சேர்ந்து ஆடினர். 34.5 ஓவரில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு டிஏக்எஸ்(DLS) முறைப்படி 156 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. ஷிகர் தவான்* 75(103); அம்பதி ராயுடு* 12(22) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றி இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்தநிலையில் இரு அணிகளுக்கிடையில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி நாளை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. இதனால் இரண்டாவது போட்டியில் மிக கவனமுடன் விளையாடும். 2வது போட்டியிலும் தோற்றால் கடும் நெருக்கடிக்கு தள்ளப்படுவோம் என்பதால், நியூசிலாந்து எப்படியாவது வெற்றி பெரும் முனைப்பில் களம் காணும். அதேவேளையில், இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், உற்சாகபலத்துடன் களம் இறங்கும். ஆனால் மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டும். நியூசிலாந்தின் முயற்ச்சிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தால் தான் வெற்றியை நோக்கி செல்ல முடியும். 

நாளை நடைபெறும் போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது வீரர்களின் செயல்திறனை பொறுத்தே உள்ளது. 

Trending News