விரைவில் கிம் ஜோங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு பற்றிய அறிவிப்பு!!

கிம் ஜோங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு பற்றி விரைவில் தேதி மற்றும் இடம் அறிவிக்கப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 5, 2018, 07:44 AM IST
விரைவில் கிம் ஜோங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு பற்றிய அறிவிப்பு!!  title=

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

இந்நிலையில் அணு ஆயுத சோதனை, பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் தொலை தூரம் தாக்கும் ஏவுகணை சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை இலக்காக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.

இதனையடுத்து, ஏப்.,21 முதல் அணுஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்த அதிபர் கிம் ஜோங் உன், அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன்-னின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், "வட கொரியாவிற்கும், ஒட்டு மொத்த உலகிற்கும் இது நற்செய்தி - பெரும் முன்னேற்றம்" என்றார். முன்னதாக, அணு ஆயுத பயன்பாட்டை நிறுத்தினால், வட கொரியாவிற்கு ஒளிமையமான எதிர்காலம் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, வடகொரியா அதிபரும் தென்கொரிய அதிபரும் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச விருப்பம் உள்ளதாக வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

Trending News