வன்முறையால் மூடப்பட்ட மெட்ரோ நிலையங்கள் மீண்டும் திறப்பு

டெல்லி வடகிழக்கு பகுதியில் உள்ள சீலாம்பூரில் வெடித்தது வன்முறை. போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசி தாக்ய போராட்டக்காரர்கள். வானத்தை நோக்கி சுட்ட காவல்துறையினர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2019, 07:51 PM IST
வன்முறையால் மூடப்பட்ட மெட்ரோ நிலையங்கள் மீண்டும் திறப்பு title=

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக மூன்றாவது நாளாக இன்றும் டெல்லியில் பல இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜாபராபாத் மற்றும் சீலாம்பூர் பகுதிகளில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் வன்முறை தொடங்கியது. இரண்டு மூன்று என கூடத்தொடங்கிய கூட்டம் ஒரு கட்டத்தில் 3000 பேர் ஜாபராபாத் சவுக் மற்றும் மவுஜ்பூர் மெட்ரோ நிலையம் அருகே கூடினர். அதேபோல் சீலாம்பூர் பகுதியிலும் மக்கள் கூட்டமாக கூடினார்கள். அவர்களை கலைந்து போகவும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் எனவும் போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் கூட்டத்தில் இருந்த சில கும்பல்காரர்கள் போலீசார் மீது கற்களை கொண்டு வீசினார்கள். இதனால் அந்த பகுதியில் போராட்டம் வன்முறையாக மாறியது. 

அந்த பகுதிகளில் கூட்டம் அதிகமாக அதிகமாக பதற்றம் மேலும் அதிகரித்தது. இதனால் அந்த பகுதிகளின் அருகில் உள்ள மெட்ரோ நிலையங்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து வெல்கம் (Welcome), ஜாஃப்ராபாத் (Jaffrabad) மற்றும் மவுஜ்பூர்-பாபர்பூர் (Maujpur-Babarpu) நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது. சிறுது நேரம் கழித்து சீலம்பூர் (Seelampur) மற்றும் கோகுல்பூரியின் (Gokulpuri) நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது என டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது. அதற்கு அடுத்தடுத்து ஜோஹ்ரி என்க்ளேவ் (Johri Enclave) மற்றும் சிவ் விஹார் (Shiv Vihar) நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டன.

 

தற்போது அந்த பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் உள்ளதால், மூடப்பட்ட மெட்ரோ நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. அதுக்குறித்து மெட்ரோ நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய டெல்லி வடகிழக்கு கூடுதல் டி.சி.பி ஆர்.பி. மீனா, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு, முதல் 50 முதல் 60 பேர் ஜாபராபாத் சீலாம்பூர் பகுதியில் கூடியிருந்தனர். அதன் பிறகு கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்தது. பிறகு சுமார் 2 முதல் 3000 பேர் ஜாபராபாத் சவுக் மற்றும் மவுஜ்பூர் (Maujpur) மெட்ரோ நிலையம் அருகே கூடினர் எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், காவல்துறையினர் கும்பலைத் கலைந்து போக சொன்னோம். அவர்கள் எங்களின் பேச்சை கேட்டு திரும்பி தெருக்களில் சென்று கொண்டிருந்தபோது, ​​சிலர்  கற்களை வீசத் தொடங்கினர். போலீஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டது. தெருவில் இருந்த சாமானிய மக்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும் கும்பல் போலீஸ் சாவடிக்கு தீ வைத்தனர்.

இவை அனைத்தும் திட்டமிட்டே செய்யப்பட்டதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. கூட்டத்தில் இருந்து பலத்த கற்கள் வீசப்பட்ட காட்சிகள் கிடைத்தன. எங்களிடம் மொபைல் கேமராக்கள் இருந்தன. அதன் மூலம் காட்சிகளை பதிவு செய்தோம். இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டம் குறித்து எங்களிடம் எந்தவித முன்னறிவிப்பு தெரிவிக்கப்படவில்லை. வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினோம். கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினோம். ஆனால் துப்பாக்கிச் சூடு மூலம் யாரையும் சுடப்படவில்லை. எச்சரிக்கை செய்யவே அப்படி செய்தோம். பொது மக்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் எனவும் கூறினார்.

டெல்லி போலீசார் அளித்த தகவலின்படி, "பள்ளி பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் வன்முறை தொடங்கியது. தாக்குதல் நடத்தியவர்கள் பஸ்ஸில் கற்களை வீசினர். அதன் பின்னர் போராட்டக்காரர்களின் கூட்டம் வழிப்போக்கர்களை குறிவைத்தது. வழிப்போக்கர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கினர். தங்கள் உயிரைக் காப்பாற்றக் கொள்ள வாகன ஓட்டிகள் ஓடத் தொடங்கினார்.

இப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை செய்திகள் பரவியதால், கூட்டம் அதிகரித்தது. அந்த கும்பல் வடகிழக்கு மாவட்ட டி.சி.பி அலுவலகத்தை சுற்றி கற்களை வீசியது. ஜாபராபாத் காவல் நிலையத்திற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

சிறிது நேரம் கழித்து, காவல்துறையினரும் கூட்டத்தின் மீது தடியடி நடத்தி விரட்ட முயன்றனர். இதன் காரணமாக, கோபமடைந்த கும்பல் மீண்டும் காவல்துறை மீது கற்களை வீசத் தொடங்கியது. அதேசமயம் ஒலிபெருக்கிகள் மூலம் அமைதியாக இருக்கவும். கலைந்து செல்லுங்கள் என போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தினர்.

இந்த வன்முறையில் எத்தனை பொது மக்கள் மற்றும் எத்தனை போலீசார் காயமடைந்துள்ளனர். எத்தனை வாகனங்கள் சேதமடைந்துள்ளன? என்பது குறித்து சொல்வது அல்லது முடிவு செய்வது கடினம். ஆம், சேதம் கணிசமானது. காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் தங்கள் அன்புக்குரியவர்களுடன் மருத்துவமனைக்குச் செல்வதைக் காண முடிந்தது.

Trending News