PM ரஃபேல் ஒப்பந்தத்தில் பைபாஸ் சர்ஜரி செய்துள்ளார்: ராகுல் காந்தி

ரஃபேல் விவகாரம்- ரூ.30,000 கோடி ஊழல் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக ஏன் எந்த விசாரணையும் இல்லை? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்!!

Last Updated : Mar 7, 2019, 12:14 PM IST
PM ரஃபேல் ஒப்பந்தத்தில் பைபாஸ் சர்ஜரி செய்துள்ளார்: ராகுல் காந்தி title=

ரஃபேல் விவகாரம்- ரூ.30,000 கோடி ஊழல் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக ஏன் எந்த விசாரணையும் இல்லை? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்!!

கடந்த 2015 ஆம் ஆண்டில், ஃபிரான்ஸ் உடன் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சகமும் பேச்சுவார்த்தை குழுவும் பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோது, பிரதமர் அலுவலகமும் தனியே பேச்சு நடத்தியதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பிரதமர் அலுவலகத்தின் இந்த செயலால் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் தரப்பு பலவீனமடைவதாக, பாதுகாப்பு அமைச்சகத்தில் எதிர்ப்பு எழுந்ததாகவும் கூறப்பட்டது. ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டதில், பாதுகாப்புத்துறை கொள்முதலுக்கான விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஆவணங்கள் திருடுபோய்விட்டதாக மத்திய அரசு கூறுவதன் நோக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்; ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடு போய்விட்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதேசமயம், இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, அதுகுறித்து முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் மாயமானது தொடர்பாக ஊடகங்களை விசாரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளவரை ஏன் விசாரிக்கவில்லை?. 

வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய், வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை, இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் போன்ற வாக்குறுதிகள் மாயமானது போல, ரஃபேல் ஆவணங்களும் மாயமாகிவிட்டதாக ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

இந்திய விமானப்படை பயங்கரவாதிகளின்  முகாம்கள் மீது அண்மையில் நடத்திய தாக்குதல் குறித்தும், அதில் இறந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்தும் வெவ்வேறு தகவல்கள் உலவி வருகின்றன.

 

Trending News