கடவுளை கூட அரசியலுக்காக பயன்படுத்தும் பாஜக -சசி தரூர்!

கடவுளை கூட அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

Last Updated : Jan 16, 2019, 11:51 AM IST
கடவுளை கூட அரசியலுக்காக பயன்படுத்தும் பாஜக -சசி தரூர்! title=

கடவுளை கூட அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க நேற்று பிரதமர் மோடி அவர்கள் கேரளா சென்றிருந்தார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக உலக புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் வழிபாடு நடத்தினார்.

இந்நிகழ்வின் போது அவருடன் கேரள ஆளுநர், நீதிபதி சதாசிவம், மாநில தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர்  உடனிருந்தனர். 

இந்த நிகழ்வினை அடுத்து, இதுதொடர்பாக திருவனந்தபுரம் தொகுதி எம்பி.,-யும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசிதரூர் பிரதமர் அலுவலகம் மற்றும் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஏற்கனவே ஆளும் பாஜக-வின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் குறித்து சசிதரூர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் தற்போது பிரதமரின் பயணத்திலும் அரசியல் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது... பத்மநாப சுவாமி கோயிலில் பிரதமர் தரிசனம் மேற்கொண்ட சமயத்தில் உள்ளூர் எம்பி., எம்எல்ஏ, மேயருக்கு கூட அனுமதி அளிக்கப் படவில்லை. எங்களின் பெயர்களை தரிசன பட்டியலில் இருந்து பிரதமர் அலுவலகம் திட்டமிட்டு நீக்கியுள்ளது. கடவுளைக் கூட அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது என்பதையே இந்த செயல்பாடு காட்டுகிறது. பிரதமர் வழிபாடு நடத்தும் சமயத்தில் மற்ற கட்சியை சேர்ந்தவர்களை அனுமதிக்கக் கூடாது என நினைக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் புதிய மேற்கூரை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சசிகதரூர், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு மற்றும் காங்கிரஸ் நிலைப்பாட்டை கடுமையாக தாக்கி பேசிய மோடி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபாடு நடத்தியது குறித்து சசிதரூர் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News