COVID-19 on Everest: எவரெஸ்டையும் எட்டிய கொரோனா வைரஸ்

உலகையே நடுங்க வைக்கும் கொரோனா வைரஸ், குளிரால் உறைய வைக்கும் எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டுவைக்கவில்லை. இமயமலைக்கு சென்று திரும்பியவர்களுக்கும்  COVID-19 பாதித்திருப்பது தெரியவந்துள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 28, 2021, 11:16 AM IST
  • எவரெஸ்டை அடைந்த கொரோனா பாதிப்பு
  • நேபாளம் உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று
  • மலையேற்றம் மூலமாக 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வருவாயாக பெறுகிறது நேபாளம்
COVID-19 on Everest: எவரெஸ்டையும் எட்டிய கொரோனா வைரஸ் title=

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து மலையிறங்கியவர்களுக்கும் COVID-19 பாதித்திருப்பது அம்பலமாகி அனைவரையும் உறைய வைத்திருக்கிறது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்று நேபாளம் கூறுகிறது.

ஏப்ரல் மாதத்தில் எவரெஸ்ட் செல்பவர்களுக்கு வழிகாட்டியாக சென்ற ஜங்பு ஷெர்பா என்பவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தது. 17,590 அடி உயரத்திற்கு சென்ற அவரின் உடல்நிலை மோசமடைந்தன.

பஹ்ரைன் இளவரசர் ஒருவருக்கு உதவியாளராக அந்த ஷெர்பாவை பயண நிறுவனம் ஒன்று பணியமர்த்தியிருந்தது. உடல்நிலை மோசமாக இருந்த ஷெர்பா விமானம் மூலம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

Also Read | History Today June 28: வரலாற்றில் இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?  

மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டில் ஆறு நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு அவர் மீண்டும் முகாமிற்கு வந்துவிட்டார். ஏனெனில் மலைவாழ் ஷெர்பா சமூகத்தைச் சேர்ந்த அவரைப் போன்ற அனுபவமிக்க வழிகாட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

அதுமட்டுமல்ல, இளவரசர் ஒருவர் மலையேறும் திட்டம் ரத்துசெய்யப்பட்டால் ஆயிரக்கணக்கான டாலர்கள் நட்டம் ஏற்படும். கொரோனாவின் பாதிப்பை எதிர்கொண்ட 38 வயதான ஷெர்பா தான் இமயமலையில் கொரோனா தொற்று பாதித்த முதல் நபர் என்று கூறப்படுகிறது. 

இந்த மாத தொடக்கத்தில் மலையேற்ற பருவம் தொடங்கியபோது, குறைந்தது 59 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. மலை ஏறுபவர்கள் மற்றும் பயண நிறுவனங்களுடனான நேர்காணல்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களின் தனிப்பட்ட பதிவுகளின்படி கணக்கிடப்பட்ட கொரோனா பாதிப்பு இது. 

Also Read | Real-life tarzan: 41 ஆண்டுகளை காட்டில் கழித்த அசல் டார்ஜான்

"மலையேறிகளுக்கு உதவியாக இருக்கும் ஷெர்பாக்களும், மலை ஏறுபவர்களும் சூப்பர்மேன்களா?" என்ற கேள்வியை எழுப்புகிறார், நேபாள மலையேறுதல் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆங் ஷெரிங் ஷெர்பா (Ang Tshering Sherpa). "இந்த பிரச்சனையை விரிவாக ஆராய்ச்சி செய்யவேண்டும்."

ஆனால் இந்த விஷயங்களை மறுக்கும் நேபாள அரசு, எவரெஸ்டில் ஒருபோதும் COVID-19 இருந்ததில்லை என்கிறது. மலையேறிகளில் ஒருவருக்கு நிமோனியா இருந்தது வேறு ஒன்றும் இல்லை என்றும், மலைக் காற்று இருப்பதால், அங்கு செல்பவர்களுக்கு இருமல் ஏற்படுவது இயல்பானது என்று கொரோனா தொற்று பாதிப்பை மறுக்கிறது நேபாள அரசு.

ஏப்ரல் மாதம், நார்வேவை சேர்ந்த மலை ஏறுபவர், எர்லண்ட் நெஸ் (Norwegian climber, Erlend Ness); பிரிட்டிஷ் மலையேறி ஸ்டீவ் டேவிஸ் (Steve Davis) உட்பட பலர் எவரெஸ்ட் பயணத்தின் போது COVID-19 தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

Also Read | Medical Marvel:50 வகையான புற்றுநோயைக் கண்டறிய ஒரே ரத்த பரிசோதனை

“கடந்த 3 நாட்களில் 2 மருத்துவமனைகள். இன்று எனக்கு பி.சி.ஆர் சோதனை இருக்கும். விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவேன் என்று நம்புகிறேன்”என்று பேஸ்புக்கில் எழுதிய நெஸ், மருத்துவமனை படுக்கையில் முகக்கவசம் அணிந்த நிலையில் தனது புகைப்படத்தை வெளியிட்டார்.

உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான நேபாளம், கடுமையான கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் தடுப்பூசிகளின் பற்றாக்குறையுடன் போராடி வருகிறது. மலை ஏறும் பருவம் தொடங்கியபோது ஷெர்பாக்கள் சிலருக்கும், பிற நேபாளிகளுக்கும் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிகள் கிடைத்தன. நேபாளத்தின் மக்கள்த்தொகையில் 3 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எவரெஸ்டில் COVID இல்லாமல் இருப்பதுதான் நேபாளத்திற்கு நல்லது. ஏனெனில் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் மலையேற்றத்தினால் அந்த நாட்டுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. 2019 ஆம் ஆண்டில் மலையேற்றம் மூலமாக 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வருவாயாக ஈட்டிய நேபாளம், 2020 ஆம் ஆண்டில் அதன் சிகரங்களை மூடியது. கோவிட் -19 பாதிப்பு உலக அளவில் வெளியானால், அது சுற்றுலா தலமான நேபாளத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும்

Also Read | North Korea: எங்கள் நாட்டில் கொரோனா இல்லவே இல்லை; அடித்து கூறும் கிம் ஜாங் உன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News