சிரியாவை மீண்டும் தாக்க தயார் நிலையில் உள்ளோம்: ட்ரம்ப் எச்சரிக்கை!!

ரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தினால் சிரியாவை தாக்க மீண்டும் தயார் நிலையில் உள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியாவை எச்சரித்துள்ளார்.

Last Updated : Apr 15, 2018, 10:45 AM IST
சிரியாவை மீண்டும் தாக்க தயார் நிலையில் உள்ளோம்: ட்ரம்ப் எச்சரிக்கை!! title=

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சிரிய அரசுப் படைகளே காரணம் என குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, ரசாயன ஆயுதங்களை ஒழிக்க தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித்திருந்தது. 

சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு ரஷ்ய படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆசாத்தின் அரசு கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றன.

கடந்த 7ந்தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் முற்றுகையிட்டன. 

இந்நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு ராணுவத்துடன் இணைந்து சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ரசாயன ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் டமாஸ்கஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சிரியாவும், ரஷ்யாவும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்த தாக்குதல் குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:- துல்லியமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்கு உதவிய, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். 

மேலும், இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிதாக ரசாயன தாக்குதலுக்கு திட்டமிட்டால் மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான விசாரணை முடிவடைதற்கு முன்பாகவே அமெரிக்கா அவசரப்பட்டு தாக்குதல் நடத்தியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending News