நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா? -அழகிரி!

பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசியதாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜிவ் காந்தி குறித்து தவறாக பேசிய சீமானை கைது செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என KS அழகிரி தெரிவித்துள்ளார்!

Last Updated : Jan 2, 2020, 04:29 PM IST
நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா? -அழகிரி! title=

பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசியதாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜிவ் காந்தி குறித்து தவறாக பேசிய சீமானை கைது செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என KS அழகிரி தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சனம் செய்து பேசியதாக  நெல்லை கண்ணனைக் கைது செய்து இருக்கிறீர்கள். ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்து புதைத்தோம் என்று பேசிய சீமானை நீங்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

சீமான் பேச்சு குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி, அமித்ஷா-வுக்கு எதிராக பேசினால் உடனடியாக கைது செய்கிறீர்கள். ஆனால், ராஜீவ் காந்திக்கு எதிராக பேசினால் எந்த நடவடிக்கையும் இல்லை.

நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி? சீமானுக்கு ஒரு நீதியா?" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக., நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அண்மையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோருடன் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா-விற்கு எதிராக வன்முறை தூண்டும் விதமாக பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். மேலும் விவகாரத்தில் அவர் மீது மூன்று பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். 

இதனிடையே, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து  சர்ச்சைக்குரிய வகையில் நெல்லை கண்ணன் பேசியதாக கூறி அவரை சிறையில் அடைக்க வேண்டும் என பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மெரினாவில் தமிழக பாஜக-வினர் நடத்திய போராட்டத்தினை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தடுப்பு காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். போராட்டங்கள் அதிகரிக்க நேற்றைய தினம் நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டார்.

கைதான நெல்லை கண்ணன் நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து  சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைதான நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல் விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending News