பிரதமரால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவமானம் ஏற்பட்டுள்ளது -மு.க.ஸ்டாலின்

அனைத்து கட்சி தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் சந்திக்க பிரதமர் மறுப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானம் என தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 4, 2018, 09:51 AM IST
பிரதமரால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவமானம் ஏற்பட்டுள்ளது -மு.க.ஸ்டாலின் title=

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில், உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், ஆளும்கட்சியை நான் தொடர்ந்து வலியுறுத்தினேன். அதேபோல அனைத்து கட்சி கூட்டமும் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் தமிழக அரசின் சார்பில் டெல்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எடுத்துச் சொல்லி, அதன்படி அந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்படி தீர்மானம் நிறைவேற்றி ஒரு வாரகாலம் முடிந்த நிலையில், இதுவரை மத்திய அரசிடம் இருந்தும், பிரதமரிடம் இருந்தும் எந்தவொரு பதிலும் வரவில்லை.

இதனையடுத்து, நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளபப்ட்டது.

அப்பொழுது தமிழக முதலமைச்சர் அவர்கள் " அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் பிரதமர் சந்திக்க மறுக்கிறார். வேண்டுமெனில் அந்தத் துறையின் அமைச்சரை நீங்கள் சந்தியுங்கள் என்று கூறியதாக தெரிவித்தார். 

தற்போது நாம் என்ன செய்யலாம்? என்று எங்களிடம் கேட்டார். நான் கேட்க விரும்புவது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சென்றால் சந்திக்கிறார். அதேபோல, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சென்றால் சந்திக்கிறார். அதுமட்டுமல்ல, யார் யாரையோ தனித்தனியாக சந்திக்கின்ற பிரதமர், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையில், குறிப்பாக, அனைத்து கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியும், பிரதமர் சந்திக்க மறுப்பது, எங்களுக்கு மட்டும் கிடைத்த அவமானமில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே கிடைத்திருக்கின்ற அவமானம் என்பதை நான் மிகுந்த வருத்தத்தோடும், வேதனையோடும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Trending News