வீரமரணம் அடைந்த சிவச்சந்திரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவச்சந்திரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 24, 2019, 02:09 PM IST
வீரமரணம் அடைந்த சிவச்சந்திரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின் title=

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் பயங்கர காயம் அடைந்தார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. 

கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். வீரமரணம் அடைந்தவர்கள் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோர் ஆவார். ஏற்கனவே இரண்டு வீரர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும், வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தா.பழூர் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் அவர்களின் படத்துக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் திமுக சார்பில் ரூ.2 இலட்சம் நிதியுதவியும் வழங்கினார்.

Trending News