மனிதன் என்பவன் தெய்வமாகலாம்: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்!!

இந்த கொரோனா காலம், பணம் இருந்தும் மனம் இல்லாதவர்களையும், மனம் இருப்பதால் முயன்று மற்றவர்களுக்கு உதவுபவர்களையும் நமக்கு அடையாளாம் காட்டியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2020, 10:51 AM IST
  • பலர் தங்கள் அசாதாரண செயல்களால் நம்மை ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள்.
  • மதுரையின் அலங்காநல்லூரில் தமிழரசன் சைக்கிள் வண்டியில் தேநீர் விற்று பிழப்பு நடத்தி வருகிறார்.
  • தான் ஈட்டும் பணத்தில் ஒரு பகுதியை சேமித்து, அதை ஏழைகளுக்கு மூன்று வேளைக்கான உணவு வாங்கித் தர உபயோகிக்கிறார்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்!! title=

மதுரை: கோவிட் -19 தொற்றுநோயால் நாடும் உலகும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலரின் வாழ்வாதாரம் பறிபோய்விட்டது. பலர் தங்கள் வேலைகளை இழந்து செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த கொரோனா காலம், பணம் இருந்தும் மனம் இல்லாதவர்களையும், மனம் இருப்பதால் முயன்று மற்றவர்களுக்கு உதவுபவர்களையும் நமக்கு அடையாளாம் காட்டியுள்ளது. பலர் தங்கள் அசாதாரண செயல்களால் நம்மை ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மதுரையில் வாழும் தமிழரசன்.

மதுரையின் (Madurai) அலங்காநல்லூரில் தமிழரசன் (Tamilarasan) சைக்கிள் வண்டியில் தேநீர் விற்று (Tea seller) பிழப்பு நடத்தி வருகிறார். கொரோனா தொற்றால் பலர் செய்ய வேலை இன்றி உண்ண உணவின்றி துயரத்தில் இருப்பதைக் கண்ட அவர் மனம் வாடியது. துயரப்படுவதோடு நின்றுவிடாமல், தான் தினமும் ஈட்டும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கும், வீடின்றி தவிப்பவர்களுக்கும் உதவுவதற்கு பயன்படுத்த முடிவு செய்தார்.

"நான் தினமும் காலையிலும் மாலையிலும் அலங்காநல்லூர், மேட்டுப்பட்டி மற்றும் புதுப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தேநீர் விற்கிறேன். அதில் எனக்கு தினசரி ஓரளவிற்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. நான் தேநீர் விற்க செல்லும் இடங்களிலெல்லாம், சாலை ஓரங்களிலும் கோயில் வாயில்களிலும் இருக்கும் ஏழைகளுக்கு இலவசமாக தேநீர் வழங்குகிறேன். மேலும் நான் ஈட்டும் பணத்தில் ஒரு பகுதியை சேமித்து, அதை ஏழைகளுக்கு மூன்று வேளைக்கான உணவு வாங்கித் தர உபயோகிக்கிறேன். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன், அவ்வளவுதான் " என்கிறார் எளிமையாக தமிழரசன்.

ALSO READ: வாழ்விலும் சாவிலும் ஹீரோவான இளைஞர்... மூளை சாவு அடைந்ததால் உடல் உறுப்பு தானம்..!!!

தனது சொந்த தேநீர் கடையை அமைப்பதும், ஏழ்மையான பொருளாதாரப் பின்னணியிலிருந்து வரும் மக்களுக்கு உதவுவதும் தான் தன் கனவு என்கிறார் தமிழரசன். தான் முன்னர் கடனுக்காக விண்ணப்பித்ததாகவும், ஆனால் வங்கிக்கு வழங்குவதற்கு தன்னிடம் எந்தவிதமான பிணையும் இல்லாததால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பசியால் தவிப்பவர்களின் வயிற்றை நிரப்பும் ஒரு மிகப்பெரும் பணியை செய்தாலும், அதை சர்வ சாதாரணமாகப் பார்க்கிறார் தமிழரசன். தன் எளிய வழியில் பலரது பசியைப் போக்கிக்கொண்டிருக்கிறார் தமிழரசன் என்ற இந்த கொடையரசன்!!

Trending News