மெர்சல் விவகாரம்: ராகுலுக்கு தமிழிசை பகிரங்க கேள்வி!

Last Updated : Oct 21, 2017, 04:45 PM IST
மெர்சல் விவகாரம்: ராகுலுக்கு தமிழிசை பகிரங்க கேள்வி! title=

விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி குறித்த வசனங்களை தவறானவை என்றும் அக்காட்சியை நீக்க வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருந்தார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் 100-வது படமாக நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவந்த படம் மெர்சல். பல தடைகளுக்கு பிறகு இந்த படம் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இதில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி பற்றியும், டிஜிட்டல் இந்தியா திட்ட செயல்பாடுகளைப் பற்றியும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் மத்திய அரசை குறை கூறியிருப்பதற்காக நடிகர் விஜய்க்கு பாஜக-வில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விஜய்யை தாக்கி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் மெர்சல் படத்தை அரசியலாக்கி இருப்பதால் காங்கிரஸ் கட்சி மெர்சல் பட கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக டிவிட்டரில் இன்று கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், ராகுலின் கருத்தை அடுத்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், “ உங்களது காங்கிரஸ் ஆட்சியின் துணையோடு லட்சக்கணக்கான எம் தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்பட்ட போது, எங்கே போனீர்கள் ராகுல்? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News