வளைந்து கொடுக்கவில்லை என்றால் உடைந்து போவாரா: சூரப்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பாவுக்கு ஆதரவாக பேசி, நேர்மையாக இருப்பதற்காக ஒருவரை வேட்டையாடினால் தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்று கூறினார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2020, 05:57 PM IST
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக பேசிய கமல்.
  • மற்றொரு நம்பி நாராயணன் உருவாக அனுமதிக்கக்கூடாது-கமல்.
  • சுரப்பா மீது ஆறு புகார்கள் வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வளைந்து கொடுக்கவில்லை என்றால் உடைந்து போவாரா: சூரப்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கமல் ஹாசன் title=

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா குறித்த விவகாரம் தினமும் பல விமர்சனங்களைக் கண்டு வருகிறது.

சூரப்பா அவர்கள், உளவு வழக்கில் பொய்யாக சிக்கவைக்கப்பட்ட விண்வெளி விஞ்ஞானி மற்றொரு நம்பி நாராயணனா என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்விட்டரில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், சூரப்பா நேர்மையான நபர் என்றும், அதிகாரங்களுக்கு முன்னால் வளைந்து கொடுப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

MNM தலைவர் கமல்ஹாசன் (Kamal Haasan), சூரப்பா தமிழகத்தின் தொழில்நுட்பக் கல்வியை மிக உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், இது மாநிலத்தில் ஊழல்வாதிகளால் பொறுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"ஒரு நபர் வளைந்துகொடுக்கவில்லை என்றால், அவர் உடைந்து போவார் என்பது அவர்களது விளக்கமாக உள்ளது” என்று கமல்ஹாசன் கூறினார்.

ஒரு கோழை எழுதிய அநாமதேய கடிதத்தின் அடிப்படையில் மாநில அரசு சூரப்பாவுக்கு எதிராக விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளது என்றார் கமல்.

எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்களால் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பல்வேறு அமைச்சர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளதா என்றும் அவர் கேட்டார்.

ALSO READ: ரஜினிகாந்த் உடன் பாஜக இணையுமா? AIADMK-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

கமல்ஹாசனின் கூற்றுப்படி, இந்த பிரச்சினை ஒரு கல்வியாளருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் மட்டும் எழுந்துள்ள பிரச்சனை இல்லை.

"இது நேர்மையாக இருக்க விரும்பும் ஒரு நபருக்கும், ஊழல் நிறைந்த மற்றவர்களுக்கும் இடையிலான போர்" என்று கமல்ஹாசன் கூறினார்.

மற்றொரு நம்பி நாராயணன் (Nambi Narayanan) உருவாக அனுமதிக்கக்கூடாது, சத்தியத்தின் பக்கத்தில் நிற்க விரும்புவோர் மௌனத்தை உடைத்து பேச வேண்டும் என்றார் கமல்ஹாசன்.

நிதி முறைகேடுகள் இருப்பதாகக் கூறப்படும் புகார்களில் சூரப்பாவுக்கு எதிராக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அரசாங்கத்தின் உத்தரவின்படி, கலையரசன் தனது விசாரணை அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் சமர்ப்பிப்பார்.

குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்பதால், சூரப்பா (MK Surappa) மீது விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுரப்பா மீது ஆறு புகார்கள் வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து பதிலளித்த சூரப்பா, தான் தன் வாழ்க்கையில் ஒருபோதும் லஞ்சம் வாங்கியதில்லை என்று கூறியிருந்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) தனது மகளை வேலைக்கு அமர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, சூரப்பா, தனது மகள், இந்திய அறிவியல் நிறுவனத்தில் பணிபுரியும் அறிவுசார் சொத்து (IP) நிபுணர் என்றார்.

ALSO READ: சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி: தனி இடஒதுக்கீடு உடனே வழங்குக!

அண்ணா பல்கலைக்கழக IP அதிகாரிகள் அவரது சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர் ஒரு கெளரவ பதவியில் பணியாற்றினார் என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், அவை, 1978 ஆம் ஆண்டின் அண்ணா பல்கலைக்கழக சட்டங்களுடன் ஒத்துபோகின்றனவா என்பது குறித்தும், சூரப்பாவின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட தற்காலிக நியமனங்கள் பற்றியும் விசாரணை அதிகாரி ஆய்வு செய்வார் என்று அரசாங்கத்தின் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News