எந்த விசாரணைக்கும் நான் தயார்: சசிகலா

அதிமுக பொதுசெயலாளர் வி.கே சசிகலா நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

Last Updated : Feb 9, 2017, 11:13 AM IST
எந்த விசாரணைக்கும் நான் தயார்: சசிகலா title=

சென்னை: அதிமுக பொதுசெயலாளர் வி.கே சசிகலா நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கடந்த 5-ம் தேதி மதியம் 2 மணிக்கு எங்கள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழுத்தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டேன். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அன்றைய தினம் ஊட்டியில் இருக்கிறார் என அறிந்தோம். அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான கடிதத்தின் நகலை பேக்ஸ் மூலம் ஊட்டியில் உள்ள ஆளுநரின் முகாம் அலுவலகத்துக்கு அனுப்பினோம்.

அதன்பிறகு ஆளுநர் மும்பைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றையும் அனுப்பினோம். இது வரை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. எனினும், என்னை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்வதற்கு ஏதேனும் அரசியல் பின்னணி இருக்கும் என நான் நினைக்கவில்லை. 

நீதிமன்றங்களை மதிக்கிறேன். சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதுபற்றி கருத்து கூறுவது சரியில்லை,
அதிமுகவின் பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்னை கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்திருக்கிறார்கள். ஆகவே, எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

சட்டப்பேரவையில் உங்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கிறோம் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்த்து திமுக உறுப்பினர்கள் பேசினர். அப்போது, ‘‘நாங்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். உங்கள் தயவு தேவையில்லை’’ என்று பன்னீர்செல்வம் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என மு.க.ஸ்டாலின் பேசுகிறார். ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த முதல்வர் என்றே திமுகவினர் நினைக்கவில்லை. உங்களை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று கூறியதிலிருந்தே திமுகதான் ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னால் இருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் என்னை முதல்வராக்க வேண்டும் என்ற தீவிரமான முடிவுக்கு எங்கள் கட்சி உறுப்பினர்கள் வந்தார்கள்.

திமுகவின் நிலைப்பாடு எப்போதுமே அதிமுகவை எதிர்ப்பதுதான். ஜெயலலிதாவை சேலையைப் பிடித்து இழுத்தவர்கள். அவர்கள் எங்களின் எதிரிக்கட்சி. திமுக விஷயத்தில் ஜெயலலிதா எப்படி செயல்பட்டாரோ, அப்படித்தான் நானும் செயல்படுவேன்.

மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி திமுகவினர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான கருத்தை பரப்பி வருகின்றனர். 75 நாட்கள் மருத்துவ மனையில் ஜெயலலிதாவை நான் எப்படி பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதை அங்குள்ள டாக்டர்கள் அறிவார்கள். வெளியில் பலர் சொல்வதைக் கேட்டு வருத்தப்படவில்லை. மனசாட்சிப்படி செயல்படுகிறேன். ஜெயலலிதாவைப் பிரிந்து வாடும் வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்.

ஆனால், இவ்வளவு நாட்கள் எங்களுடன் இருந்த ஓ.பன்னீர் செல்வம், விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறுவதைக் கேட்டுதான் வருத்தப்படுகிறேன். பச்சைத்துரோகியாக இருந்திருக்கிறாரே என நினைத்து வருத்தப்படுகிறேன்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்பது ஒரு திறந்த புத்தகம். எய்ம்ஸ் டாக்டர்கள் வந்தனர். லண்டன் டாக்டர் வந்தார். சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்கள் வந்தார்கள். மாரடைப்பு ஏற்பட்ட அந்த நாளில் கூட பிசியோதெரபி செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் அவர் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். டிசம்பர் 29-ம் தேதி வீட்டுக்கு அழைத்து வரலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதற்குள் ஏதேதோ நடந்துவிட்டது. விசாரணைக் கமிஷன் அமைப்பேன் என பன்னீர்செல்வம் கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவர் ஜெயலலிதாவுக்கு செய்யும் பச்சைத் துரோகம் பற்றிதான் வருத்தப்படுகிறோம்.

தமிழகத்தின் முதல்வராக நிச்சயமாக பதவி ஏற்பேன் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஜெயலலிதாவின் ஆசியோடு, அவர் தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்பட்டாரோ, அதே வழியில் நானும் தொடர்ந்து செயல்படுவேன்.

இவ்வாறு பேட்டி அளித்தார்.

Trending News