ஆளுநர் தேநீர் விருந்து: திமுகவும் புறக்கணிப்பு... அரசு தரப்பில் முதல்வர் பங்கேற்பாரா?

Governor Tea Party Boycott: சுதந்திர தினத்தை ஒட்டிய ஆளுநர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.  

Written by - Sudharsan G | Last Updated : Aug 14, 2024, 02:27 PM IST
  • ஆளுநர் மாளிகையில் நாளை மாலை தேநீர் விருந்து நடைபெறுகிறது.
  • ஆளுநர் முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
  • திமுக கூட்டணி கட்சிகள் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்திருந்தன.
ஆளுநர் தேநீர் விருந்து: திமுகவும் புறக்கணிப்பு... அரசு தரப்பில் முதல்வர் பங்கேற்பாரா? title=

Governor Tea Party Boycott: ஒவ்வொரு சுதந்திர தினத்தன்று மாலையில் ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து வழங்குகிறார். இதற்காக, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், முக்கிய அமைப்புகளுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்புவிடுத்திருந்தார் 

இந்நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்த நிலையில், தற்போது திமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக அறிவிப்பு 

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக ஆளுநரின் தேநீர் விருந்தை புறகணிப்பதாகவும், அரசு சார்பில் பங்கேற்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை அறிவிப்பார் என்றும் கூறினார். மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என் ரவி செயல்படுவதாக கூறி திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கிசுகிசு : பூ கட்சி விவகாரங்களை கசியவிடும் எதிர்கோஷ்டி - கடுப்பில் காக்கி மாஜி..!

முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,"தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளில் இருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே அவரது செயல்பாடுகள் இருப்பதால் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்" என தெரிவித்திருந்தார். 

அதிமுக, பாஜக பங்கேற்கும்

ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், தற்போதும் ஆளுநராக அவரே நீடித்து வருகிறார். அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படாலம் எனவும் கூறப்படுகிறது. 

திமுக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுகவும், பாஜகவும் இதில் பங்கேற்கும் என தெரிகிறது. அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்பட முன்னாள் அமைச்சர்கள் சிலர் பங்கேற்பார்கள் எனவும், பாஜக சார்பில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதன் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.  

எனவே, தற்போது திமுக சார்பில் யாரும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்கள் என ஆர்.எஸ். பாரதி உறுதிபட தெரிவித்திருக்கும் சூழலில், தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்த முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலைக்குள் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டைக்கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை கொடியேற்ற உள்ளார். 

மேலும் படிக்க | தமிழ்நாட்டின் 26 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் - முழு லிஸ்ட் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News