நியாயமான விசாரணை எப்படி நடைபெறும்? செந்தில் பாலாஜியை நீக்குங்கள் - அண்ணாமலை

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2023, 03:33 PM IST
  • செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு
  • அமைச்சரவையில் இருந்து நீக்குங்கள்
  • முதலமைச்சருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
நியாயமான விசாரணை எப்படி நடைபெறும்? செந்தில் பாலாஜியை நீக்குங்கள் - அண்ணாமலை  title=

செந்தில் பாலாஜி வழக்கு

2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக  செந்தில் பாலாஜி  இருந்தபோது, அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணமுராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக பிறக்கப்பிட்ட அந்த உத்தரவில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான போக்குவரத்து துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக முழுமையாக துவக்கத்தில் இருந்து விசாரணை நடத்த வேண்டும். 

அண்ணாமலை அறிக்கை

தேவையெனில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கலாம். இந்த வழக்கில் இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தனர். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை தொடர்ந்த மேல் முறையீட்டு மனு வழக்கில், சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று, தமிழகக் காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க - Karnataka முதலமைச்சர் யார்? கையைப் பிசையும் காங்கிரஸ்! வேடிக்கை பார்க்கும் பாஜக

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

2014-ம் ஆண்டு, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, லஞ்சம் வாங்கி, மோசடி செய்ததாக, அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர், வாங்கிய லஞ்சப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கூறி, அவர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் 30.7.2021 அன்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த தீர்ப்பில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய எல்லா முகாந்திரங்களும் இருந்தும், தமிழக அரசு அவ்வாறு வழக்குப் பதிவு செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது என்றும், ஊழல் என்பது அரசுக்கும் சமூகத்திற்கும் எதிரானது, அதனை அனுமதிக்க முடியாது என கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாது என்றும், வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது.

நியாயமான விசாரணை நடைபெறுமா?

தி.மு.க அரசில் அதிகாரமிக்க அமைச்சராக வலம்வரும் செந்தில் பாலாஜியை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற, தமிழக அரசும், காவல்துறையும் இணைந்து செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது. தன் மீது வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடருவாரேயானால், நியாயமான விசாரணை எப்படி நடக்கும்? சட்டவிரோதப் பணப் பரிமாற்ற மோசடி நடந்திருப்பதால், செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்திருந்தது. ஆனால், அந்த விசாரணையில் உண்மை வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறை விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றார். 

செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து இரண்டு மாதங்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், அமலாக்கத் துறையின் மேல் முறையீட்டு மனுக்களையும் அனுமதித்துள்ளது. தமிழக அமைச்சராக இருக்கும் ஒருவர் மீது, தமிழகக் காவல்துறை விசாரணை நடத்துவது என்பது எந்த அளவுக்கு நேர்மையாக நடைபெறும் என்பது கேள்விக்குறி. உடனடியாக, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீதான ஊழல் தடுப்பு விசாரணை, நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க - DK Shivakumar Disproportionate Assets Case: டி.கே.சிவகுமாருக்கு எதிரான மனு.. விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News