TNPL Auction 2023: ஏலத்தில் கம்பீராக மாறிய அஸ்வின் - எப்படி தெரியுமா?

Tamil Nadu Premier League Auction 2023: டிஎன்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், திண்டுக்கல் அணி தேர்வுக்குழு சார்பில் இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் பங்கேற்றார். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 24, 2023, 05:34 PM IST
  • டிஎன்பிஎல் ஏலம் நேற்றும், இன்றும் நடைபெற்றது.
  • சாய் சுதர்சன் அதிக தொகைக்கு ஏலம் போனார்.
  • முதன்முறையாக டிஎன்பிஎல் தொடரில் வீரர்கள் ஏலம் மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
TNPL Auction 2023: ஏலத்தில் கம்பீராக மாறிய அஸ்வின் - எப்படி தெரியுமா? title=

Tamil Nadu Premier League Auction 2023: ஐபிஎல் தொடரை போன்று  இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ள தொடர் என்றால் அது தமிழ்நாடு பிரீமியர் லீக் தான். டிஎன்பில் தொடர் கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமாக நடந்துள்ள நிலையில், இந்தாண்டு ஏழாவது சீசன் நடைபெற உள்ளது. இந்த சீசனில், வழக்கம்போல் அல்லாமல், வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து, டிஎன்பிஎல் தொடருக்கான ஏலம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 

டிஎன்பிஎல் வீரர்களுக்கான ஏலம் சென்னை மகாபலிபுரத்தில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில், பல்வேறு நட்சத்திர வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். நடராஜன், வருண் சக்கரவர்த்தி, விஜய் சங்கர், சாய் கிஷோர் உள்ளிட்டோரும் இதில் இடம்பெற்றனர். மொத்தம் 942 வீரர்கள் ஏலம்விடப்பட்ட நிலையில், 8 அணிகளுக்கும் தலா ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

டாப் 5 வீரர்கள்

இரண்டு நாள் ஏலத்தின் முடிவில், அதிகபட்ச தொகைக்கு சாய் சுதர்சன்தான் தேர்வாகியிருந்தார். அவரை ரூ. 21.60 லட்சம் கொடுத்து கோவை அணி வாங்கியிருக்கிறது. இவரை அடுத்து, சகோதரர்களான சஞ்சய் யாதவ், சோனு யாதவ் ஆகியோரும் அதிகபட்ச தொகைக்கு எடுக்கப்பட்டனர். 

நான்கு முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, ரூ.17.6 லட்சம் கொடுத்து சஞ்சய் யாதவையும், நெல்லை அணி ரூ. 15.2 லட்சம் கொடுத்து சோனு யாதவையும் வாங்கியுள்ளனர். இதற்கிடையே, திண்டுக்கல் டிராகன்ஸ் ரூ. 15.95 லட்சம் கொடுத்து ஷிவம் சிங்கை எடுத்துள்ளது. தொடர்ந்து, சேலம் அணி அபிஷேக் தன்வரை ரூ. 13.2 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது. 

மேலும் படிக்க | TNPL Auction: இந்த தமிழக வீரருக்கு அடித்தது ஜாக்-பாட்... ஐபிஎல்லை விட அதிக தொகை!

ஏலத்தில் அஸ்வின்...!

இந்நிலையில், இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் ஏலத்தில் பங்கேற்றார். அவரை அந்த அணி ரூ. 10 லட்சத்திற்கு தக்கவைத்த நிலையில், ஏலத்தில் பங்கேற்று வீரர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டார்.

அவர் ஆலோசனையில் திண்டுக்கல் அணி அதிகபட்சமாக ரூ. 15.95 லட்சம் கொடுத்து, ஷிவம் சிங்கை எடுத்துள்ளது. மேலும், சுபோத் பாட்டியை ரூ. 10.4 லட்சத்திற்கும், வருண் சக்கரவர்த்தியை ரூ. 6.75 லட்சத்திற்கும் எடுத்தது. அந்த அணியில் நட்சத்திர வீரர்கள் சரவணகுமார், பாபா இந்திரஜித், மதிவண்ணன் ஆகியோரும் உள்ளனர். 

கம்பீரை போல...

அந்த வகையில், அஸ்வின் ஏலத்தில் பங்கேற்று வீரர்களை தேர்வு செய்தது, ஐபிஎல்லில் கௌதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக செய்தது போல் இருந்ததாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். கௌதம் கம்பீர், ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடியபோதே, ஏலத்தில் கலந்துகொண்டு வீரர்களை தேர்வு செய்துள்ளார். 

அதேபோன்று, அஸ்வின் திண்டுக்கல் அணிக்காக வீரர்களை தேர்வு செய்துகொடுக்க, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு இடையே கிடைத்த இடைவெளியில் வந்து ஏலத்தில் பங்கெடுத்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தனது யூ-ட்யூப் சேனல் மூலம் பல திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்கள் குறித்து பதிவு செய்து வந்தார். தற்போது, அவர்களை தான் விளையாடும் அணிக்காக இனங்கண்டு, ஏலத்தில் எடுக்கவும் ஆர்வங்காட்டியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

திறமையாளர்களை தட்டித்தூக்கும் அஸ்வின்

அஸ்வினின் கிரிக்கெட் குறித்த நுண்ணறிவு, போட்டியை அவர் கணிக்கும் முறை, கிரிக்கெட் குறித்தான விசாலமான பார்வை என அனைத்தும் அவருக்கென பிரத்யேக ரசிகப்படையையே சேர்த்து வைத்துள்ளது. அஸ்வின் தற்போது ஐபிஎல் தொடரை தவிர்த்து, டி20 போட்டிகளில் விளையாடுவது குறைந்துவிட்ட நிலையிலும், அவர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் நீடிக்கிறார். அவர் இதுவரை டிஎன்பிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 10 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்து 267 ரன்களை குவித்த அவர், அதிகபட்சமாக 52 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | TNPL Auction: ஏலத்தில் எடுக்கப்பட்ட டாப் 10 வீரர்கள் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News